Wednesday, May 15

ஒபெக்கிடமிருந்து இலங்கைக்கு கடிதம் :மறுக்கிறது வெளிவிவகார அமைச்சு







இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விரும்பத்தகாத நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறு எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் இலங்கை அரசுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளதாக சிங்கள நாளேடொன்று தெரிவித்தது.
இலங்கையில் அண்மைக் காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அது தொடர்பில் அரசு உடன் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் குறித்த கடிதத்தில் இலங்கைக்கு ஒபெக் அங்கத்துவ நாடுகள் ஐ.நா. மனித உரிமை கூட்டத் தொடரில் வழங்கிய பங்களிப்பு ஞாபகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனை கருத்திற்கொண்டு இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் அரசு கவனம் செலுத்தப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் உள்ளக தகவல்களை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
இது குறித்து விடிவெள்ளியிடம் கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சின் தொடர்பாடல் துறை சிரேஷ்ட அதிகாரியான ரொட்னி பெரேரா, அவ்வாறான எந்தவொரு கடிதமும் ஒபெக் அமைப்பிடமிடருந்து தமக்கு கிடைக்கவில்லையென தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சு என்ற ரீதியில் உத்தியோகபூர்வமாக அவ்வாறு எந்த கடிதமும் கிடைக்காத நிலையில் அமைச்சிலுள்ள தனி நபர்களுக்கு அவ்வாறு ஏதேனும் கடிதம் கிடைத்ததா என தன்னால் உறுதிப்படுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்

No comments:

Post a Comment