Monday, July 1

அரசாங்கத்தின் ஒற்றராக பஷீர் சேகுதாவூத் கட்சிக்குள் செயற்படுவதாக ஹக்கீம் குற்றச்சாட்டு

 
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோரிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டம் நேற்று சனிக்கிழமை இரவு கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இதன்போதே இவர்கள் இருவரிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தின் மண்டப மேடையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்இ தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மற்றும் பொதுச் செயலாளர் எம்.ரி.ஹசன் அலி ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

இந்த கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிந்தபோது, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோரிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வாய்த்தர்க்கம் சுமார் 15 நிமிடங்கள் நீடித்தமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட போதே கட்சித் தலைவர் மற்றும் தவிசாளர் ஆகியோரிடையே இந்த வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளதாக அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.

அதாவது வட மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸானது ஆளும் ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டமைப்புடனேயே இணைந்து போட்டியிட வேண்டும் என அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். அவ்வாறில்லாமல் வட மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதென்றால் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என அமைச்சர் பஷீர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டமைப்புடன் இணைந்த நிலையிலேயே கல்முனை மாநகர சபை மற்றும் கிழக்கு மாகாண சபை தேர்தல் ஆகியவற்றில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

இதனால் வட மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடியும். இதற்காக அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் ஹக்கீம் பதிலளித்துள்ளார். இதனையடுத்தே அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோரிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறாக சென்று கொண்டிருந்த சமயத்தில், ‘உங்களுக்கு என்மீது நம்பிக்கை இல்லை. இதனால் நான் எப்படி உங்களுடன் இணைந்து பணியாற்ற முடியும்’ என அமைச்சர் பஷீர், கட்சி தலைவரிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு, ‘உங்களை எப்படி நம்புவது. கிழக்கு மாகாண சபை தேர்தலின்போது கட்சியின் அனுமதியின்றி பிரதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தீர்கள். தற்போதும் கட்சியின் அனுமதியின்றி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை பெற்றுள்ளீர்கள். இப்படி கட்சிக்கு துரோகமிழைத்துள்ள நிலையில் உங்களை எப்படி நம்புவது’ என அமைச்சர் ஹக்கீம் கட்சியின் உயர் பீட கூட்டத்தில் பஷீரின் கருத்துக்கு பதலளித்துள்ளார்.

அதுமட்டுமல்ல நீங்கள் அரசாங்கத்தின் தீர்மானங்களைத்தான் இங்கு பேசுவதாகவும் சந்தேகப்படுகின்றேன் என ஹக்கீம் ஒரு போடு போட்டுள்ளார். ஹக்கீமின் இந்தப் பேச்சு பஷீரை கடசியை விட்டுக் கழற்றுவதற்கான முடிவை உறுதியாக எடுத்துள்ளார் என்பதையே காட்டுவதாக பிரதேச சபையின் தவிசாளர் ஒருவர் நம்மிடம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபையில் அரசாங்கம் கொண்டு வருகின்ற தீர்மானத்தை கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்கின்ற முடிவு ஏகமனதாக அங்கிகரிக்கப்பட்டது. இந்த விடயத்தில் கட்சியின் முடிவுக்கு மாற்றமாக செயற்படுவோர் உடனடியாகவே கட்சியை விட்டு வெளியேற்றப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment