Sunday, June 30

உங்கள் மீது நம்பிக்கையில்லை: பஷீர் சேகுதாவூத் ஹக்கீமுடன் மோதல்

hakeem and seguநேற்று சனிக்கிழமை இரவு முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற அதியுயர்பீட கூட்டத்தில் அதிகளவான உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை. அத்துடன் கட்சித் தலைவருக்கும் அமைச்சர் பஷீர் சேகுதாவுதுக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம், முத்தலிப் பாருக், தௌபீக் ஆகியோரும் மாகாணசபை உறுப்பினர்களான ஹாபிஸ் நஸீர், எம்.ஐ.எம்.மன்சூர், ஏ.எல்.தவம், ஹசன் மௌலவி ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.
இதேவேளை, இக்கூட்டத்தில் பஷீர் சேகுதாவுதுக்கும் ரவூப் ஹக்கீமுக்கும் சுமார் 15 நிமிடங்கள் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கில் ஆளும் கட்சியுடன் சேர்ந்தே முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட வேண்டும். தனித்துப் போட்டியிடுவது என்றால் அரசிலிருந்து விலகவேண்டும் என்ற பஷீர் சேகுதாவுத் தெரிவித்துள்ளார்.
ஆனால், அரசுடன் இருந்துகொண்டே கல்முனை மாநகரசபை மற்றும் கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டதாகவும், அதேபோன்று வடக்கு தேர்தலிலும் அரசுடன் இருந்துகொண்டே தனித்துப் போட்டியிட முடியுமெனவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இதன்போது ரவூப் ஹக்கீமைப் பார்த்து, உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லாத நிலையில் எப்படி உங்களுடன் இணைந்து பணியாற்றமுடியுமென பஷீர் சேகுதாவூத் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்நிலையில், 13ஆவது திருத்த சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான மாகாணசபை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு எழுத்துமூலம் மாகாணசபை உறுப்பினர்களை கோருவதற்கு தீர்மானித்துள்ளதாக கட்சியின் உயர்பீட உறுப்பினர் கே.எம்.ஏ. ரசாக் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment