Friday, June 28

மத்துகம பிரதேச சபையில் மாடறுப்புத் தடைக்கான பிரேரணை படுதோல்வி

மத்துகம பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மாடறுப்பதையோ மாட்டிறைச்சிக் கடை நடத்துவதையோ தடைசெய்ய தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று மத்துகம பிரதேச சபைத் தலைவர் எல்.ஜீ. லியன ஆராச்சி கூறினார்.
மத்துகம பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதில் அவர் மேலும் கூறியதாவது,
இலங்கையில் 16 சதவீதமானோர் போஷாக்குக் குறைபாட்டினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் போது மாட்டிறைச்சிக்கு தடைவிதிப்பது முட்டாள் தனமானதாகும். அதேபோன்று ஆடு, கோழி மற்றும் கடல் உயிரினங்களும் உணவாகக் கொள்ளப்படுகின்றன. இவையும் உயிர்க் கொலையாகும். இவற்றுக்கும் தடை விதிக்கப்படுகின்றதா என்று சூடான தொனியில் கேள்வி எழுப்பிய அவர், தான் மத்துகம பிரதேச சபையில் முதுகெலும்புள்ள ஒரு தலைவர் என்ற வகையில் மாடறுப்புக்கும் இறைச்சிக் கடைக்கும் எதிராகக் கொண்டு வரப்பட்ட பிரேரணையை ஆட்சேபித்து நிராகரிப்பதாக தெரிவித்தார்.
மத்துகம பிரதேச சபையின் ஜூன் மாதத்துக்கான கூட்டம் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற போதே ஆளும் தரப்பு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் டபிள்யூ.ஏ.விஜித்த, மத்துகம பகுதியில் மாடு அறுப்பதற்கும் மாட்டிறைச்சிக் கடை நடத்துவதற்கும் எதிராக பிரேரணை ஒன்றினைச் சமர்ப்பித்திருந்தார்.
இதனை ஆதரித்து ஆளுந்தரப்பு உறுப்பினர்களான டீ.டீ.லலித் ரணசிங்க, அத்துல மத்துமகே மற்றும் எதிரணித் தலைவர் ஜினதாஸ் சிரிவர்த்தனவும் உரை நிகழ்த்தினர்.  அதனைத் தொடர்ந்து சபைத் தவிசாளரினால் இப்பிரேரணை அனுமதிக்க முடியாதென நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment