Tuesday, May 21

இராணுவ ஆட்சி கிழக்கிற்கும் விரிகிறது : முஜிபுர் ரஹ்மான்


வடக்கில் நிலவும் இராணுவ ஆட்சியைப் போன்று தற்போது கிழக்கிலும் இராணுவ ஆட்சியை மேற்கொண்டு தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டினார்.
ராஜகிரியவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டை யாரும் பிளவுபடுத்த அனுமதிக்க முடியாதென்று தெரிவிக்கும் ஜனாதிபதி, சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு துண்டுதுண்டுகளாக கூறு போட்டு நாட்டின் காணிகளை விற்றுள்ளார்.
இந்நிலையில் வடக்கில் தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகள் இராணுவத்தினரை பயன்படுத்தி அபகரித்த அரசாங்கம், தற்போது கிழக்கிலும் இதனை மேற்கொண்டு வருகின்றது.
வடக்கில் நிலவும் இராணுவ ஆட்சியைப் போன்று கிழக்கிலும் தற்போது இராணுவ ஆட்சி நிலவுகின்றது.
குறிப்பாக கிழக்கில் புல்மோட்டையில் மக்களின் காணிகளை கடற்படையினர் தமது தேவைக்காக சுவீகரித்துள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகள் திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களிலும் இடம்பெறுகின்றன.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுமானால் நாடு இன்னுமொரு யுத்தத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment