Wednesday, May 8

ஹர்த்தால் அனுஸ்டிக்க வேண்டாம் என்கிறது இராணுவம்

தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அஸாத் சாலி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாளை நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கோரும் துண்டுப் பிரசுரங்கள் கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டுள்ளன. அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் அமைப்பு எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள இத் துண்டுப் பிரசுரத்தில் இன்றைய தினம் வியாபார நிலையங்கள், பாடசாலைகள், காரியாலயங்கள் மற்றும் வங்கிகளை மூடி ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதேவேளை ஹர்த்தால் அனுஷ்டிக்கவோ இயல்பு நிலைமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படவோ வேண்டாம் என இராணுவத்தினர் கிழக்கு மாகாண முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பள்ளிவாசல்கள் மற்றும் சம்மேளனங்களின் பிரதிநிதிகளுக்கும் இராணுவத்தினருக்குமிடையிலான விசேட சந்திப்பு ஒன்று நேற்றுக் காலை சித்தாண்டி இராணுவ முகாமில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஹர்த்தால் அனுஷ்டிக்க வேண்டாம் என மக்களிடம் வேண்டுகோள்விடுக்குமாறு படையினர் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் சம்மேளன பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஸாத் சாலி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் சட்டத்தின் பார்வையில் குற்றவாளியாக கருதப்பட்டே கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறான நிலையில் இதற்கு எதிராக ஹர்த்தால் அனுஷ்டிப்பது தேவையற்ற பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும்.

 எனவே இதுவிடயத்தில் மக்களை அறிவூட்டுவதும் ஹர்த்தாலுக்கு துணைபோக வேண்டாம் எனக் கோருவதும் பள்ளிவாசல் சம்மேளனங்களினது கடப்பாடாகும் எனவும் இராணுவத்தினர் இச் சந்திப்பின்போது வேண்டுகோள்விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment