Monday, May 13

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு!

கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மூன்று பேர் எதிர் வரும் சபை அமர்வில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரசுக்கு தொடர்ச்சியாக புறக்கணிப்பு நடப்பதாகவும், அமைச்சரவையில் முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப் படுத்தும் இரண்டு அமைச்சர்களும் வாய்மூடி மௌனிகளாக இருந்துவிட்டு வருகின்ற நிலையிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை கொண்டு வருகின்ற அமைச்சரவைப் பத்திரங்களுக்கு கையை உயர்த்துகின்ற வேலையை இந்த முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர்கள் மிகச் சிறப்பாக செய்துவிட்டு, பொத்துவில் தொகுதி மக்கள் பாதிக்கப்படுவது பற்றி இவர்களுக்கு எந்தவிதக் கவலையும் இல்லையாம்.

அம்பாரை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அமைச்சர் அதாஉல்லா மற்றும் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை போன்றவர்களினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு மனம் நொந்த நிலையில் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக கொண்டு வரும் திட்டங்களுக்கு இந்த அமைச்சர்கள் ஆதரவாக கையை உயர்த்துவது கண்டிக்கத்தக்க செயற்பாடாகும் என்று பிரதேச சபைத் உறுப்பினர் ஒருவர்  தெரிவித்தார்.

உதாரணமாக அட்டாளைச்சேனை சந்தைக் கட்டிடம் அமைப்பது தொடர்பாக உதுமாலெப்பை சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு ஆதரவளித்து செயற்பட்டதைக் குறிப்பிடலாம்.

மக்கள் எதை விரும்புகின்றார்களோ? அதனையே அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னெடுக்கின்றது. மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயற்படும் அமைச்சர் உதுமாலெப்பையின் பத்திரத்திற்கு இந்த அமைச்சர்கள் ஆதரவளித்ததன் மர்மம் என்ன? என கட்சி ஆதரவாளர்களினால் கேள்வி எழுப்பப்படுகின்றது.

இவ்வாறான நிலையில்தான் கொழும்பில் நடந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் இந்த விடயங்கள் காரசாரமாக பேசப்பட்டு, உடனடியாக கிழக்கு மாகாண அமைச்சரவையை கூட்டுமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் குறிப்பிட்ட இரண்டு அமைச்சர்கள் மீது கடும் கோபம் கொண்டதாகவும் இனிமேல் இவ்வாறான விடயங்கள் நடந்தால் அதிரடி நடவடிக்கைகள் எடுக்க தயங்க மாட்டேன் எனக்கூறியதாகவும் கதைகள் கசிந்துள்ளது.

மாகாண சபை அமர்வை புறக்கணிப்பது தொடர்பான கதைகள் கசிந்துள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அதனை தாமதப்படுத்துமாறு கோரியுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment