Tuesday, April 30

உயிருக்கு அச்சுறுத்தல்! அசாத் சாலி தலைமறைவு

Asath_Saliஉயிர் அச்சுறுத்தல் இருப்பதால் தாம் தலைமறைவாகியுள்ளதாக முஸ்லிம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி சேவையின் செய்திப் பிரிவொன்றுக்கு தொலைபேசி மூலம் வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார் என தமிழ் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிடுள்ளது.
இது தொடர்பான செய்தியில்,
“என்னை கைதுசெய்வதற்கு முயற்சிக்கின்றனர். குறுந்தகவல் அனுப்பியதாக குற்றஞ்சுமத்துகின்றனர். பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்குவதாக கூறுகின்றனர். அல்கைதா என என்னைக் கூறுகின்றனர். பல பெயர்களில் என்மீது குற்றஞ்சுமத்துகின்றனர். பல வழிகளிலும் என்னைக் கைதுசெய்வதற்கு இந்த அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

சரியானதைத் தான் எப்போதும் அரசாங்கத்திற்குக் கூறுகிறதும். நீங்களே வாக்குறுதி வழங்கிய 13 + அதிகாரத்தை வழங்குமாறு கோருகிறோம். நீங்களே வாக்குறுதி வழங்கிய LLRC பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோருகிறோம். இவற்றை மையப்படுத்தி அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் முயற்சிலேயே நாங்கள் இறங்கியுள்ளோம். இதற்காக நாம் வாராந்த பத்திரிகையாளர் சந்திப்புக்களை நடத்தி அனைத்து மக்களையும் தெளிவுபடுத்தி, மக்களை ஒன்றிணைக்க முயற்சிக்கிறோம். இந்த செயற்பாடுகள் அரசாங்கத்திற்கு வலியை ஏற்படுத்துகிறது.
எனவே இவற்றைத் தடுப்பதற்காக எதாவது ஒரு காரணத்தைக் கூறி அசாத் சாலியைக் கைதுசெய்வதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகிறது. சனிக்கிழமையன்று எனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் வந்தனர். ஜீப் வண்டியில் ஐந்து பேரும் வந்து என்னைக் கைதுசெய்வதற்காகத் தேடுகின்றனர். ஏன் என்னைக் கைதுசெய்ய முயற்சிக் கவேண்டும்? ஏன் இவ்வாறு மக்களைக் கைதுசெய்ய முயற்சிக்க வேண்டும்?. வாக்குமூலமொன்றைப் பெற வேண்டும் எனக் கூறி எனது வீட்டிற்கு வந்து வாக்குமூலமொன்றைப் பெற்றனர்.
இதன்பின்னர் அரச ஊடகங்களைப் பயன்படுத்தி அசாத் சாலி பயங்கரவாதி என எனக்கெதிரான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கிறார். இந்திய, புலம்பெயர் சமூகத்துடன் இணைந்து செயல்படுகிறார் போன்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர். எனினும், அரசாங்கம் பயங்கரவாதிகளுடனேயே இருக்கிறது. அரசாங்கமே பயங்கரவாத செயல்பாடுகளை முன்னெடுக்கிறது. எனினும், எங்களையே அரசாங்கம் நசுக்க முயற்சிக்கிறது. இவற்றுக்கெல்லாம் பயந்து நாங்கள் ஓடப்போவதில்லை. எனினும், இந்தச் சந்தர்ப்பத்தில் நான் தலைமறைவாகியிருந்தே பேசவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏன் அசாத் சாலியுடன் தொடர்புகொள்ள முடியாமலுள்ளது? ஏன் அசாத் சாலி தலைமறைவாகியுள்ளார்? ஆகிய விடயங்களைத் தெளிவுபடுத்தவே இந்த ஊடகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி இந்தத் தகவல்களை வழங்குகிறேன். எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மக்கள் என்னைப் பாதுகாத்துக் கொள்வர் என்ற நம்பிக்கையில் நான் தலைமறைவாகி தற்போது உண்மைகளைத் தெளிவுபடுத்துவதற்காக இந்த ஊடகத்தின் ஊடாக பேசுகிறேன்” என அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment