பாகிஸ்தானில் அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக
பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பு மனு தாக்கல் நடந்து வருகிறது. மனுக்கள்
பரிசீலனையும் தொடங்கி உள்ளது. மனுக்கள் பரிசீலனையில் ஈடுபட்டுள்ள
அதிகாரிகள், வேட்பாளர்களிடம் நேர்முகத்தேர்வு நடத்துகின்றனர்.
இஸ்லாமிய சட்டம் பற்றி சொல்லுங்கள், குரானில் உள்ள ஒரு சில வாசகங்களை
ஒப்பியுங்கள், முறைப்படி தொழுகை (நமாஸ்) செய்வது எப்படி என்றெல்லாம்
வேட்பாளர்களிடம் அதிகாரிகள் கேள்வி கேட்டுள்ளனர். சிந்து மாகாணத்தில் ஒரு
வேட்பாளரிடம் சென்ட் போட்டு கொண்டு தொழுகை நடத்தலாமா என்று அதிகாரிகள்
கேட்டனர். அதற்கு அவர் கலப்பில்லாத சென்ட் போட்டு கொண்டால் நடத்தலாம் என்று
பதில் அளித்துள்ளார்.
லாகூரில் தய்யபா சொகைல் சீமா என்ற வேட்பாளரிடம் தேர்தல் அதிகாரி அன்வர்
மெகபூப் அவரது வயது குறித்து விமர்சனம் செய்துள்ளார். அவரது கணவர் சாடியா
சொகைலும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவரிடம், நீங்கள் இருவரும்
அரசியல் வாழ்க்கைக்கு வந்தால் குழந்தைகள் வீட்டில்
புறக்கணிக்கப்படுவார்கள், வீட்டை கவனிக்க முடியாது. இதை எப்படி
சமாளிப்பீர்கள் என்று கேட்டுள்ளனர்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி வேட்பாளரும், அதிபர் ஆசிப் அலி சர்தாரியின்
நெருங்கிய நண்பருமான வாசிஸ் முசாபர் தாபி என்பவரிடம் ஒரு நாளைக்கு எத்தனை
முறை தொழுகை நடத்த வேண்டும் என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. கராச்சியில்
சன்னி டெஹ்ரிக், கட்சி வேட்பாளர் சாகித் அகமத் என்பவரிடம் எல்எல்பி என்பதன்
விரிவாக்கம், அல்லது ‘கிராஜுவேஷன் மற்றும் ‘சூப்பிரன்டென்டண்ட் போன்ற
வார்த்தைகளை உச்சரிக்க சொல்லியுள்ளனர்.
No comments:
Post a Comment