Monday, April 29

அ.இ.மு.கா.வின் கடிதத்தில் மு.கா. கையெழுத்திட முடியாது: ஹக்கீம்!


முள்ளியவளை முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதனால் இப்பிரச்சினைக்கு கூட்டமைப்பின் தலைவர் மூலம் தீர்வு பெற்றுக் கொள்வதற்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கடிதமொன்றினைத் தயாரித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்தை சேகரித்து வருகிறது.
இந்நிலையில் இக் கடிதத்தில் மு.கா. பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட முடியாது என அமைச்சர் ஹக்கீம் விடிவெள்ளியிடம் தெரிவித்தார்.
 
இக்கடிதத்துக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூன்று பாராளுன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ள நிலையில் கட்சியின் தலைவர்  செயலாளர் கையொப்பமிடவில்லை. இதுதொடர்பில் அமைச்சரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரச்சினைகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கத் தேவையில்லை. பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துக் கொள்ளவேண்டும் என நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
“சம்பந்தன் சுமுகமாகப் பழகும் ஒரு அரசியல் தலைவர், பேச்சவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதே சிறந்தது. இறுதிக் கட்ட நடவடிக்கையே கடிதம் மூலம் அணுகுவதாகும். இதைவிடுத்து கடிதங்கள் எழுதவது தங்களைப் பிரபல்யப்படுத்திக் கொள்ளும் முயற்சியாகும்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற  உறுப்பினர்கள் எவராவது குறிப்பிட்ட  கடிதத்தில் கையொப்பமிட்டிருந்தால் அது தவறான முறையாகும்.
கையொப்பமிடுவதற்கு முன்பு கட்சியுடன் கலந்து பேசியிருக்க வேண்டும். அதுவே சிறந்த முறையாகும். தனியாக தீர்வுகளையெடுக்காது கட்சியின் ஆலோசகனைகளுக்கேற்ப செயற்படுவதே நன்மை பயக்கும்.
பொதுபலசேனா போன்ற அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த முடியாது. பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இடம்பெறும் என எதிர்பார்க்கவும் முடியாது. அதனால்  அவ் அமைப்புகளுடன் கடித மூலம் பிரச்சினைகளை அணுகலாம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி தீர்வு காணுவதே  சிறந்த முன்னெடுப்பாகும்.
 அகில இலங்கை  முஸ்லிம் காங்கிரஸ் தயாரித்துள்ள கடிதத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் அமைச்சருமான  பஷீர் சேகுதாவூத், பாராளுமன்ற உறுப்பினர்கள் முத்தலில் பாரூக் பாவா, பைசல் காசிம் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
-vidivelli

No comments:

Post a Comment