Thursday, February 28

ஜம்மியத்துல் உலமா சபைக்கு பகிரங்க எச்சரிக்கை



ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் பொறுப்பேற்கக் கூடாது. ஹலால் சான்றிதழை வழங்கி நாட்டில் மதவாதத்தினைப் பரப்பி வந்த உலமா சபைக்கு அரசாங்கம் துணை போகக்  கூடாது  என பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் வண. கலபொட ஹத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். 

கொழும்பு 5 இல் ஸ்ரீ  சம்புத்தத்வ ஜயந்தி மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு, இந்நாட்டில் வேறு மதச் சட்டங்களுக்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டோம். ஹலால் சான்றிதழானது  ஷரியா சட்டத்தின் கீழ் உள்ள ஒரு முறைமையாகும். நாட்டில் ஒரு சட்டமே நடைமுறையில் இருக்க வேண்டும். அது அந்நாட்டின் சட்டமாக மட்டுமே இருக்க வேண்டும்.அதனால்,  ஷரியா சட்டத்தின் கீழ் உள்ள ஹலால் சான்றிதழ் வழங்கும் முறையை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். 


அது மட்டுமல்லாது ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டின் மூலமாக அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா, நாட்டில் பிரிவினை வாதத்தினையும் மதவாதத்தினையும்  பரப்பி வந்தது. ஹலால் தொடர்பான பிரச்சினை மேலெழும்பியவுடன் தாம் செய்துவந்த மதவாத நடவடிக்கைகளுக்கு அனுசரணை தேடிவருகின்றது. அதனாலேயே ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையினைப் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு அரசாங்கத்துக்கு ஜம்இயத்துல் உலமா சபை வேண்டுகோளொன்றை விடுத்துள்ளது. 

உலமா சபையின் மோசமான இந்நடவடிக்கைக்கு அரசாங்கம் ஒருபோதும் துணைபோகக் கூடாது.
அத்துடன், அண்மைக் காலங்களில் உலமாக்கள் சபையானது பொதுபலசேனா அமைப்பினை மதவாத அமைப்பு என விமர்சித்து வந்ததுடன், பிக்குகளின் மத நடவடிக்கைகளையும் மிக மோசமாகக் கண்டித்து வந்தது. உலமாக்கள் சபையின் இந்நடவடிக்கைகளை பொதுபல சேனா அமைப்பு மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. 

அதுமட்டுமல்லாது இலங்கை தேசிய கீதத்துக்கு பிக்குகள் எழும்பி மரியாதை செலுத்துவதில்லை என உலமாக்கள் சபை குற்றச்சாட்டொன்றினை முன்வைத்திருந்தது. 

எமது சமய நடவடிக்கையில் தலையிடுவதற்கு  உலமா சபைக்கு  எவ்வித அதிகாரமும் இல்லை. அத்துடன், எம்முடன் மோதுவதற்கு உலமாக்கள் சபை முயற்சிக்கக் கூடாது. அவ்வாறு மோதினால் உலமாக்கள் சபை பின்விளைவுகளை எதிர்நோக்கவேண்டியிருக்கும் எனவும் தெரிவித்தார்

No comments:

Post a Comment