Wednesday, April 25

மதத்துவேஷ நிகழ்வுகளுக்கு இந்து மா மன்றம் கடும் கண்டனம்

பாடல்பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலயச்சூழலில் பௌத்த சமயத்தைப் பரப்பும் நோக்குடன் அரசாங்கத்தினதோ, இராணுவத்தினதோ ஆதரவால் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை தான் கண்டிப்பதாக அகில இலங்கை இந்து மா மன்றம் தெரிவித்துள்ளது.

இந்து மா மன்றத்தின் தலைவர் வி. கயிலாசபிள்ளை, பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன் ஆகியோர் iகெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையொனறிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்து மக்களின் சுதந்திரத்தைப் பாதிக்கின்ற எந்தவாhரு முயற்சியையும் பொறுக்க முடியாது, மதத் துவேஷ நிகழ்வுகளுக்கு இந்து மா மன்றம் கண்டனம் எனும் தலைப்பிலான அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இன்றை தமிழ் தினசரி ஒன்றில் 'பிள்ளையார் கோவிலை அகற்ற உத்தரவு – திருமலையில் தமிழர்கள் கொந்தளிப்பு' எனும் தலைப்பில் பிரசுரமான செய்தி கண்டு அதிர்ச்சியும் மன வேதனையும் அடைகின்றோம்.

60 வருட கால பெருமைவாய்ந்த பிள்ளையார் ஆலயத்தை அகற்றுமாறு அரசாங்கமோ, எந்த ஓர் அதிகார சபையோ உத்தரவு பிறப்பிக்க இந்நாட்டின் சட்டமோ அல்லது எந்த நீதி நியாயமோ இடம் தரவில்லை.

தம்புள்ளையில் இருக்கும் இந்து ஆலயத்தை அகற்ற வேண்டும் என்ற கோஷம் சம்பந்தமான செய்தியறிந்தும் வேதனை அடைகிறோம்.

பாடல்பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலயச்சூழலில் பௌத்த சமயத்தைப் பரப்பும் நோக்குடன் அரசாங்கத்தினதோ, இராணுவத்தினதோ ஆதரவால் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை அறிந்தும் கவலையடைகின்றோம்- கண்டிக்கிறோம்.

இந்த நாட்டில் சம உரிமையுடனும் சுதந்திரத்துடனும் வாழும் உரிமை இந்து மக்களுக்கு உண்டு. இந்தச் சுதந்திரத்தை பறிகொடுக்க இந்த நாட்டின் எந்தவோர் இந்துவும் தயாரில்லை. இந்து மக்களின் சுதந்திரத்தை பாதிக்கின்ற எந்தவொரு முயற்சியையும் பொறுக்க முடியாது.

இந்த நாட்டின் மக்கள் அனைவரது அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதாக வாக்குறுதியளித்திருக்கின்ற ஜனாதிபதியோ அவரின் அமைச்சர்களோ, அமைச்சின் செயலாளர்களோ இப்படியான மதத்துவேஷ நடவடிக்கைகளுக்கு கட்டளை பிறப்பித்தருப்பார்களென்று எம்மால் நம்ப முடியாது. உடனடியாக இந்த துவேஷ நடவடிக்கைகளை நிறுத்துமாறு பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றோம்.

மேலும், இதில் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சகல தமிழ் அரசியல் தலைவர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்"
 

No comments:

Post a Comment