Wednesday, April 25

முரண்பட்டுச் செல்வது தான் பொருத்தமென்றால் முரண்படுவதற்கும் தயங்க மாட்டோம்


இர்ஷாத் றஹ்மத்துல்லா: கடந்த 2012.04.20 வெள்ளிக்கிழமை தம்புள்ள ரங்கிரிய ஹைரியா பள்ளிவாசல் மீது தொடுக்கப்பட்ட மிலேச்சனத்தனமான தாக்குதல் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளையும் வெகுவாக பாதித்திருக்கின்றது.முஸ்லிம்கள் தமது உயிர்கள் மற்றும் உறவுகளை விடவும் தமது மார்க்கத்தை உயர்வாக மதிக்கின்றார்கள்.அவ்வாறான ஒர் சமூகத்தின் வணக்கஸ்தலத்தை இன்னுமொரு மதத்தின் பெயரால் தகர்க்க முற்படுவதானது பாராதூரமாக கண்டிக்கப்படக் கூடியது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தள்ளார்.

கட்டார் நாட்டுக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன்,தம்புள்ள பள்ளிவாசல் தெடர்பான தற்போது ஏற்பட்டுள்ள நிலவரத்தையடுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது குறித்து அமைச்சரினால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது -பௌத்த மக்களின் உணர்வுகளைத் துண்டும் விதத்தில் குறித்த ஒரு மதக் குருவின் தலைமையில் ,ஒரு குழுவினர் ஒரு தனியார் வானொலியூடாக தொடர்ச்சியாக விசமத்தனமான பிரசாரங்களை செய்து மக்களைப் பலவந்தமாக அழைத்து இக்கைங்காரியத்தை நிறைவேற்றியிருக்கின்றார்கள்.
ஆனால் இந்த நாட்டு சிங்கள மக்களில் பெரும்பான்மையினர் இந்த நாட்டின் ஏனைய சமூகங்களுடன்,சகோதரத்துவத்தையும்,சமாதான வாழ்வையும்.விரும்புகின்றனர்.எதிராக சிலர் காழ்ப்புணர்ச்சிகளை கட்டவிழ்த்து விடுகின்ற பொழுது அதன் தாக்கம் சிறுபான்மை சமூகத்தனை மட்டுமல்லாது பெரும்பான்மையினையும் சேர்த்தே பாதிக்கின்றது.இதைத்தான் கடந்த காலங்களில் நமது நாட்டில் இடம் பெற்ற நிகழ்வுகளில் கண்டோம்.
இன்று நாட்டின் அபிவிருத்தி பல தசாப்தங்கள் பின்னோக்கி தள்ளப்பட்டிருப்பதுடன்,சர்வதேச சமூகத்திற்கு மத்தியில் தலைகுணிவையும் ஏற்படுத்தியுள்ளது.அது மட்டுமல்லாமல் நமது நாட்டிற்கெதிராக சர்வதேச சமூகம் கட்டவிழ்த்து விடப்போகின்ற நடவடிக்கைகள் என்னவென்று தெரியாமலும் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றோம். பொருளாதார தடை வருமா?,அல்லது வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? என்பதை புரிந்த கொள்ள முடியாமல் இருக்கின்றோம். ஆனால் எந்த தாக்கமென்றாலும், விகிதாசாரத்திற்கேற்ப பெரும்பான்மை சமூகத்திற்கே அதனது பெரும் பகுதி போய்ச் சேரும் என்பதை நாம் மனதிற்கொள்ள வேண்டும்.பௌத்த மதம் ஏனைய மதங்களை மதிக்கத் தான் சொல்லியிருக்கின்றதே தவிர,காழ்ப்புணர்வை கக்க சொல்லவில்லை,அவ்வாறு செய்வது பௌத்த மதத்தையே அவமதிப்பதாகும்.பௌத்தமதத்தின் பெயரால் ஏனைய மதங்களுக்கு எதிராக வெறுப்பை கக்கி, பௌத்த மதத்தையேஅவமதிக்கும் கைங்கரியத்தை பௌத்த மதத் தலைவர்களே செய்யலாமா?
கடந்த கால அனுபவங்களில் இருந்து,பாடங்களை படிப்பதற்காக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்ற பெயரில்,ஒரு ஆணைக்குழுவையே நியமித்து,அந்த ஆணைக்குழு பாடங்களை சொல்லித் தந்த பின்னும் பாடம் படிக்காமல் இருக்கலாமா என கேட்கவிரும்புகின்றேன்.
சுதந்திர இலங்கையின் ஆரம்பகாலத்தில் தமிழ் மக்கள்; எதிர்நோக்கிய பிரச்சினைகளை அன்றைய தமிழ் தலைமைத்துவங்கள், சுட்டிக்காட்டிய பொழுது,அவற்றிற்கு தீர்வு கண்டிருந்தால்,30 வருட யுத்தத்தையும் தவிர்திருக்கலாம், நாட்டையும் அபிவிருத்தியின் பால் இட்டுச் சென்றிருக்கலாம்.கற்றுக் கொண்ட ஆணைக்குழுவின் தேவையே இருந்திருக்காது.
ஆனால் அன்று தமிழ் சமூகத்தினை துச்சமென மதித்து,அவர்களது உணர்வுகளை காலுக்குள் போட்டு மிதித்ததன் விளைவு தமிழ் மக்களை விரக்தியின் விழிம்புக்குள் தள்ளி முப்பது வருடங்கள் யுத்தம் செய்து,பல உயிர்களை இழந்து, அதன் மூலம் அபிவிருத்தியில் பின்னடைவினை எற்படுத்தி,வேலையில்லாத் திண்டாட்டமும்,விலைவாசி உயர்வும், அனைவருக்கும் உயர் கல்வி வழங்க முடியாமல் தத்தளித்து இறுதியில்,இவ்வாறான ஒரு நிலைமை மீண்டும் ஏற்படாமல் இருக்க பாடம் சொல்லித்தரத்தான் கற்றுக் கொண்ட பாடங்கள் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
இந்தியா,மலேசியா,சிங்கப்பூர்,போன்ற பல்லின மக்கள் வாழும்,நாடுகள் வளர்ந்தமைக்கான காரணம்,அவை சகல சமூகங்களையும்,அரவனைத்து சென்றதோடு மட்டுமல்லாமல் சிறுபான்மை சமூகங்களுக்கு அவற்றின் உரிமைகளுக்கு மேலதிகமாக சலுகைகளையும் வழங்கியதாகும்.
சிறுபான்மை சமூகங்களுக்கு மத்தியில் அவநம்பிக்கை தோன்றுகின்ற பொழுது,அவை நசுக்கப்படுகின்ற பொழுது, இங்கு அமைதியின்மை தோன்றுவது தவிர்க்கப்படமுடியாததாகும். அவ்வாறான ஒரு சூழ் நிலையில் நாட்டின் வளர்ச்சி பின்னோக்கி செல்கின்றது. அதனால் பாதிக்கப்படுவது பெரும்பான்மை சமூகமே.
தம்புள்ள தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் அக்கிராமத்தை சேரந்தவர்கள் அல்ல என்பதை தெளிவாக கூறமுடியும். வெளியில் இருந்து கொண்டுவரப்பட்டவர்களே இந்த தாக்குதலை செய்தார்கள் என்பதை அறியமுடிகின்றது. தம்புள்ள மாநகர சபை தலைவர் மற்றும் எதிர்கட்சி தலைவர் இந்த தாக்குதல் சம்பவத்தை ஆதரிக்கவில்லை. அப்பிரதேசத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன்,இச்சம்பவத்தை கண்டிப்பதோடு,மட்டுமல்லாமல் முஸ்லிம்கள் அப்பள்ளியில் தொழுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.அவர்கள் அனைவருக்கும் எமது முஸ்லிம் சமூகம் சார்பில் நன்றி கூறுகின்றோம்.
புண்ணிய பூமியில் கசினோக்கள் இருந்தால்,அகற்ற சொல்லி போராடலாம்,விபச்சார விடுதி இருந்தால் அவற்றi ஒழிக்க போரடலாம். சாராயத் தவறனை இருந்தால் இழுத்து மூடச் சொல்லி ஊர்வலம் போகலாம். வணக்கஸ்தளங்கள் புண்ணிய பூமியில் இருக்கக் கூடாது என்பதில் என்ன நியாயம் இருக்கின்றது. முஸ்லிம்களை பொறுத்த வரை தமது தாய் நாட்டை நேசிப்பது,அவர்களது மார்க்கக் கடமைகளில் ஒன்று என்ற அடிப்படையில் அன்று பிரிட்டிசாருக்கு எதிராக போராடிய போதும், யுத்தம் நடை பெற்ற போதும், யுத்தம் முடிவடைந்த போதும்,முஸ்லிம்கள் தாய் நாட்டிற்கு விசுவாசமாகவே செயற்பட்டார்கள்.யாரும் நாட்டை காட்டிக் கொடுக்கவில்லை.ஆனால் கருதடது முரண்பாடுகள் காணப்பட்டன.அவை விவாதங்களுக்கு இடம் கொடுத்திருந்தது.
அந்த வகையில் தான் ஜெனிவாத் தீர்மாணம் கொண்டுவரப்பட்ட போதும்.முஸ்லிம்கள் வீதிக்கு இறங்கினார்கள். முஸ்லிம் அரசியல் தலைமைகள் முஸ்லிம் நாடுகளின் ஆதரவை வேண்டி நின்றன.இந்த நாட்டின் அதியுயர்,இஸ்லாமிய மார்க்கபீடமான ஜமிய்யத்துல் உலமாவின் தலைமைத்துவம்,உட்பட அதன் உயர்பீடமும் முஸ்லிம் நாடுகளும் நமது நாட்டுக்காக ஆதரவு தேடியது. மனித உரிமைகள் சபையில் அங்கத்துவம் வகித்த 10 முஸ்லிம் நாடுகளுல் 8 நாடுகள்,எமது நாட்டுக்கு ஆதரவாக வாக்களித்தன. ஆனால் ஆறு கடக்கும் வரை தான் அண்ணன்-தம்பி என்பது போல்,ஜெனீவாவில் ஆதரவாக பேசிய முஸ்லிம்களின் நாவு வரழ்வதற்கு முன்னரே. இவ்வாறான ஒரு சம்பவம் நடந்தேறியிருப்பது. வேதனைக்குரியதும், கண்டித்தக்கதுமாகும்.
இவ்விடயத்தில் பெரும்பான்மை சிங்கள சகோதரர்கள். தெளிவாக இருப்பதையிட்டு நாம் மகிழ்சியடைகின்றோம். நன்றியும் தெரிவிக்கின்றோம். சிறிய ஒரு குழுவினருக்கு பயந்து முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளில் கைவைக்க அரசு இடம் கொடுக்கக் கூடாது. நாட்டுக்கு ஆதரவாக முஸ்லிம் நாடுகளிடம் பேசத் தெரிந்த முஸ்லிம் தலைமைகளுக்கு,எமது பிரச்சினைகளில் பேசுவதற்கும், தலையிடுமாறு கோறுவதற்கும் தார்மீக பொறுப்பு இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
சமுதாயத்திற்காகத் தான் நாம் அரசியல் செய்கின்றோம் தவிர, அரசியலுக்காக சமுதாயத்தின் தோள்கள் மீது எரி சாவரி செய்ய ஆயத்தமில்லை. அதே நேரம் அரசை விட்டு வெளியேற காரணம் தேடி இவ்வாறான சந்தர்ப்பம் வருகின்ற போது அடித்தது அதிஷ்டம் என்று காய் நகர்த்துகின்ற கூட்டமும் அல்ல. சமுதாயத்தை பாதுகாக்க இணைந்து செல்வது தான்; பொருத்தமென்றால் இணைந்து செல்வதற்கும், முரண்பட்டுச் செல்வது தான் பொருத்தமென்றால் முரண்படுவதற்கும் தயங்காத கூட்டம் நாம் என்பதை இத்தருனத்தில் கூறி வைக்க விரும்புகின்றோம் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

1 comment: