Monday, November 21

2012 வரவு செலவு திட்டம், சில முக்கிய துளிகள்

2012 வரவு செலவு திட்டம், சில முக்கிய துளிகள்

 

2012ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டப் பிரேரணையை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்று பிற்பகல் பாராளுமன்றில் சமர்பித்தார்.

எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றியபோது, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறினர்.

தொடர்ந்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி,


இலங்கையிலுள்ள ஒவ்வொரு பொலிஸாருக்கும் பிறக்கும் மூன்றாவது குழந்தைக்கும் தலா ஒரு லட்சம் ரூபா வழங்கப்படும் என்றார்.

பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் ஒவ்வொரு படை வீரர்களின் பெற்றோருக்கும் மாதாந்தம் தலா 750 ரூபா கொடுப்பனவு வழங்க முன்மொழிவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், அனைத்து அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கும் மாதாந்த கொடுப்பனவு செலுத்துவதற்காக 14,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 300 ரூபாவிலிருந்து 1000 ரூபாவாகவும் ஏனையோருக்கு 100 இருந்து 500 ரூபாவாகவும் அதிகரிக்கவும் ஜனாதிபதியால் முன்மொழியப்பட்டது.25 வருடத்திற்கு மேல் ஊடக மற்றும் கலை சேவையில் உள்ளவர்களுக்கு மோட்டார் கார் ஒன்றினை கொள்வனவு செய்ய வட்டி இல்ல கடன் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.அரச ஊழியர்களுக்கு 2012 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக நூற்றுக்கு 10 சதவீதம் சம்பள உயர்வு வழங்க தான் பரிந்துரைப்பதாக ஜனாதிபதி தமது வரவு செலவுத்திட்ட உரையில் குறிப்பிட்டார்.அடுத்த வருடத்தில் 8 லட்சம் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவூம் தெரிவித்தார்.மேலும், கண்டி, நுவரெலிய,- திருக்கோணமலை, இரணைமடு, அநுராதபுரம், ஆகிய பகுதிகளில் உள்நாட்டு விமான நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் கண்டி, நுவரெலியா மற்றும் இரணைமடு ஆகிய உள்நாட்டு விமான நிலையங்களை அடுத்த வருடத்தில் அமைக்க 750 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.புதிய வாகனக் கொள்வனவு பதிவு வரி நீக்கப்பட்டுள்ளதாகவும் சொகுசு வாகனங்கள் இறக்குமதிக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் லொறி மற்றும் பஸ்களுக்கான பதிவு வரி அமுலில் இருக்கும் எனவும் அறிவித்தார்.

சுற்றுலா துறைக்கென இறக்குமதி செய்யப்படும் பஸ்களுக்கான வெட் வரி நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

48 மணித்தியாலங்களுக்கு மாத்திரம் இலங்கைக்கு விஜயம் செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் அறவிடப்பட மாட்டாதெனவும் கூறினார்.

விளையாட்டு துறையை மேம்படுத்தும் நோக்கில் யாழ். துறையப்பா, கிளிநொச்சி விளையாட்டு மைதானம் உள்ளிட்டவற்றை அடுத்த வருடத்தில் அபிவிருத்தி செய்ய 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பரீட்சையில் சித்தியடையாவிட்டால் வாழ்க்கையிலும் சித்திபெற முடியாது என கருத வேண்டாம். சாதாரண தர உயர் தர பரீட்சையில் சித்திபெற்று பல்கலைக்கழகம் செல்ல முடியாத மாணவர்கள் தொழிற்பயிற்சி கல்லூரிகளில் அடுத்த வருடம் முதல் இணைத்துக் கொள்ளப்படுவர் என ஜனாதிபதி கூறினார்.

நாட்டில் வளர்ந்துவரும் சுகாதார சேவையை மேம்படுத்த 2012 வரவு செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

தேயிலை உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் அதற்கென வழங்கப்பட்டு வரும் வருடாந்த கொடுப்பனவை 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவிலிருந்து 3 லட்சம் ரூபா வரையும் புதிய தேயிலை செடிகளை உருவாக்க வழங்கப்படும் வருடாந்த நிதி 1 லட்சம் ரூபாவிலிருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவரையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்தார்.

அடுத்த வருடம் இலங்கையில் சர்வதேச தேயிலை மாடு இடம்பெறவுள்ளது. இலங்கை தேயிலைக்கான சந்தையை அதிகரித்துக் கொள்ள இதன்மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார்.

அரச காணிகள் தனியாருக்கு விற்கப்படவில்லை எனவும் அவை 99 வருடங்கள் தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தனியார் நிறுவன பறிமுதல் சட்டத்தின் ஊடாக தனியார் சொத்துக்கள் பறிக்கப்படவில்லை எனவும் அரசிடம் முன்னர் இருந்த நிறுவனங்களே மீளப்பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

No comments:

Post a Comment