Friday, June 17

காதுகள் இல்லாத முயல்: ஜப்பானில் மக்கள் பீதி

[ புதன்கிழமை, 15 யூன் 2011, 03:45.54 மு.ப GMT ]
ஜப்பானில் புகுஷிமா அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு ஏற்பட்ட பின் கடந்த மாதம் காதுகள் இல்லாமல் ஒரு முயல் பிறந்துள்ளதாக செய்திகள் படத்துடன் வெளியாயின.
இதனால் ஜப்பானில் மக்கள் மத்தியில் கதிர்வீச்சு குறித்த பீதி அதிகரித்துள்ளது. ஜப்பானின் புகுஷிமா டச்சி அணுமின் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியை அடுத்து கதிர்வீச்சு உருவானது.
அணுமின் நிலையத்தைச் சுற்றி 50 கி.மீ பரப்பளவுக்கு வசித்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். எனினும் ஒரு சிலர் அந்த பரப்பளவில் இன்னும் வசித்து வருகின்றனர்.
அணுமின் நிலையத்தில் இருந்து 29 கி.மீ தொலைவில் உள்ள நாமியீ என்ற சிறிய நகரில் வசித்து வரும் யுகோ சுகிமோட்டோ என்ற பெண்ணின் வீட்டில் கடந்த மே மாதம் 7ம் திகதியன்று காதுகள் இல்லாமல் ஒரு முயல் பிறந்துள்ளது.
அதோடு அல்பினிசம்(வெண்தோல் நோய்) என்ற நோய் காரணமாக அதன் கண்கள் மிகவும் சிவந்து காணப்படுகின்றன. மரபணுக்களில் சிதைவு ஏற்பட்டால் தான் அல்பினிசம் போன்ற நோய்கள் வரும்.
இதுகுறித்து சுகிமோட்டோ கூறியதாவது: நான் கடந்த 10 ஆண்டுகளாக முயல் வளர்த்து வருகிறேன். ஆனால் இப்போது தான் முதன் முறையாக இதுபோன்று காதுகளே இல்லாமல் ஒரு முயல் பிறந்துள்ளது. இந்தப் பகுதியில் விளையும் காய்கறிகளை அதற்கு நான் கொடுப்பதில்லை. அந்த முயல் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறது.
முயல் குறித்த செய்திகள் படத்துடனும், வீடியோவுடனும் வெளியான பின் ஜப்பானில் கதிர்வீச்சு குறித்த பீதி மேலும் அதிகரித்துள்ளது. ஆனால் இதுபோன்ற குறைபாடுகளுடன் மிக அரிதாக விலங்குகள் பிறப்பது இயற்கை தான். கதிர்வீச்சுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று நிபுணர்கள் சிலர் கூறியுள்ளனர்.
அதேநேரம் நேற்று டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி(டெப்கோ)வெளியிட்ட செய்திக் குறிப்பில் அணுமின் நிலையத்தின் அருகில் உள்ள கடல் நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 240 மடங்கு கதிர்வீச்சு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அணுமின் நிலையத்தின் அருகில் நிலத்தடி நீரில் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட "ஸ்ட்ரோன்டியம்" என்ற வேதியியல் தனிமம் கலந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட இத்தனிமம் உடலில் கலந்தால் எலும்பு புற்றுநோய் மற்றும் ரத்தப் புற்றுநோயை ஏற்படுத்தும். டெப்கோவின் இந்த அறிவிப்பும் காதுகள் இல்லாத முயல் பிறந்ததும் தற்போது ஜப்பானில் மக்கள் மத்தியில் கதிர்வீச்சால் ஏற்படும் அபாயங்கள் பற்றிய பீதியைக் கிளப்பி விட்டுள்ளன.

No comments:

Post a Comment