Saturday, May 18

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரானை தாக்க இஸ்ரேல் தயார்!

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரானை தாக்குவதற்கு முயற்சியை இஸ்ரேல் துவக்கியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் ஈரானை தாக்க இருப்பதை முன்னிட்டு வளைகுடா பகுதியில் தங்களின் தளங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது. இச்செய்தியை வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
திமோன்னாவில் உள்ள அணுசக்தி நிலையத்தை இம்மாதம் இஸ்ரேல் மூடியதற்கு காரணம் தாக்குதலுக்கு முன்னோடியாக கருதப்படுகிறது. ஈராக் உள்பட ஈரானின் தாக்குதலுக்கு இலக்காகும் தளங்கள் மற்றும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாட்டை பலப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தூதரக அதிகாரிகள், ஃபெடரல் அதிகாரிகள், ஒப்பந்த அதிகாரிகள் உள்பட 15 ஆயிரம் அமெரிக்க குடிமகன்கள் தற்பொழுது ஈராக்கில் உள்ளனர். மேலும் குவைத்தில் 15 ஆயிரம் ராணுவத்தினர், கத்தரில் ராணுவ தளம், பாரசீக வளைகுடாவில் விமானம் தாங்கி கப்பல்கள் ஆகியன ஈரானின் தாக்குதலுக்கு இலக்காகும் வாய்ப்புள்ளது. தாக்குதல் துவங்கினால் அமெரிக்காவின் மையங்கள் எதனையும் சும்மா விடமாட்டோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாக்குதல் நடத்தினால் உருவாகும் எதிர்விளைவுகளை குறித்து அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும், பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டாவும் இஸ்ரேலுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கூடுதல் தடைகளை விதித்து ஈரானுக்கு நிர்பந்தம் அளிப்பதன் மூலம் தங்கள் வழியில் கொண்டுவரலாம் என்பது அமெரிக்காவின் நோக்கமாகும். இவ்விவகாரங்களின் தீவிரத்தை குறித்து உணர்த்த கடந்த வியாழக்கிழமை ஒபாமா, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடினார்.

No comments:

Post a Comment