Sunday, May 5

அசாத் சாலியை விடுதலை செய்க : குரல் கொடுக்கிறார் ஹக்கீம்

 
அசாத் சாலி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென நீதி அமைச்சரும் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கூறினார்.
 
வவுனியாவில் இன்று ஞாயிற்றுகிழமை (05) முற்பகல் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடமாகாண புனரமைப்புக்கூட்டத்தில் வவுனியா, மன்னார், முல்;லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த வன்னி கட்சி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
 
றோயல் கார்டன் ஹோட்டலில் நடைபெற்ற இக் கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிபாவா பாறுக் ,பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
அங்கு உரையாற்றும் போது கைது செய்யப்பட்டுள்ள ஆசாத்சாலி பற்றி அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது :
இன்று எனது மனச்சாட்சியை உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு முக்கிய பிரச்சினை பற்றி முதலிலேயே பேச வேண்டும். இந்த அரசாங்கத்தில் நீதி அமைச்சராக இருக்கும் எனக்கு அரசாங்கம் செய்யும் எல்லாவற்றிலும் உடன்பாடாக இருக்க முடியாது .
 
இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி என்று ஒன்று நடக்கின்றது என்ற விடயத்திற்கு அத்தாட்சியாக இருக்கவேண்டிய நானே உண்மையிலேயே உடன்பட முடியாத நிலையில் இருக்கின்றேன் என்பதை பகிரங்கமாக சொல்லுகிறேன் . அண்மைக்காலமாக இந்த அரசாங்கத்திற்கு எதிராக பல விமர்சனங்கள் இருந்து வருகின்றன . 
 
ஆட்களின் கைது, விடுதலை தொடர்பான விடயங்கள் சர்ச்சைக்குரியனவாகவுள்ளன என்ற ஆத்திரத்தை அவற்றோடு தொடர்புபட்டவர்கள் என்னுடன் பகிர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் அவற்றைவிடுத்து இப்பொழுது தனிமனிதர் ஒருவரை பற்றி கதைக்கின்றேன். 
 
கடந்த வியாழக்கிழமை அசாத்சாலி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் எமது கட்சியின் சார்பில் கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டவர். அந்த தேர்தல் மேடைகளில் கடிவாளம் இல்லாமல் பேசிகின்றவர் என்றபடியால் அரசாங்கத்தோடு முரண்பாடுகளை தோற்றுவிக்கின்ற வகையில் பேசுவதை தவிர்த்துக்கொண்டால் நல்லதென நான் அவரிடம் கூறியிருந்தேன்.
 
இருந்தாலும் அவரது அரசியல் செய்யும் பாணி அவ்வாறான படியால் தேர்தல் முடிவுகளின் பின்பும் அவரது அரசியல் அவ்வாறே தொடரந்;தது. ஆனால் அண்மைக்காலமாக சில தீவிரவாத அமைப்புகள் முன்னெடுத்த பிரச்சாரங்கள் மிகத் தீவிரமாகவும் இன துவேஷத்தை ஏற்படுத்த கூடியதாக இருந்த படியால் இந்த அசாத்சாலி என்பவரின் பேச்சுக்கள் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது .
 
காரணமில்லாமல் யாரையும் கைது செய்ய முடியாது . என்ன குற்றத்துக்காக அவர் கைதுசெய்யப்பட்டார் என பொலிஸ் தரப்பில் இது வரை சொல்லப்படாத நிலையில் அவரை கைது செய்து இருப்பது படு பாதகமான விடயமாகும்.
 
நேற்று அரசாங்க பத்திரிகையான “சிலுமின” வில் அவர் ஒரு பயங்கரவாத குழுவோடு தொடர்புபட்டுள்ளதாக வெளிவந்துள்ளது. என்னுடைய பார்வையில் இந்நாட்டின் உளவுத்துறைக்கு அதைவிட பெரிய அவமானம் இருக்க முடியாது.
 
அசாத்சாலி பயங்கரவாதியாக அல்லது பயங்கரவாதத்தை உருவாக்குபவராக இருந்தால் இவரைவிட இன்னும் எத்தனையோ பேர்களை கைது செய்திருக்க வேண்டும். இது வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயம். சட்டத்தின் ஆட்சியென்பது இவ்வாறான மோசமான செயல்களால் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு விமர்சிக்கப்படுகின்றது.
அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். இதை முஸ்லிம் காங்கிரஸ் அரசியலாக்க விரும்பவில்லை. நான் அரசியலில் புள்ளிபோட்டுக்கொள்பவனாக என்னை ஒரு போதும் அடையாளம் காட்டியவன் அல்லன்.
 
ஆனால் சரியான விடயங்களை சரியான சந்தர்பங்களில் பேசித்தான் ஆக வேண்டும். இந்த விடயத்தில் அரசாங்கம் பக்கச்சார்பாக நடந்து கொண்டதாகத்தான் பலரும் கூறுகின்றனர். அவர்களோடு நாங்களும் உடன்பட்டாகாக வேண்டும் என்பதை தெளிவாக சொல்லுகிறேன்.

No comments:

Post a Comment