Tuesday, May 21

மாகாணசபைகளை ஒழிக்க கட்சிகளை ஒன்றிணையுமாறு அழைக்கிறார் மல்வத்தை பீடாதிபதி


Sumangala-Thera
நாட்டுக்குப் பொருத்தமற்ற மாகாணசபை முறைமையை இல்லாதொழிக்க எல்லாக் கட்சிகளும்,அமைப்புகளும் ஒன்றாக கரம் கோர்க்க வேண்டும் என்று மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் வண.திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
கண்டி தலாதா மாளிகையில் நேற்று முன்தினம், மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரரை சிறிலங்கா அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, சந்தித்து ஆசிபெற்ற போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மாகாணசபைகளுக்குகப் பதிலாக, தற்போதைய தேவைகளுக்குப் பொருத்தமான மாற்று நிர்வாக முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“இந்தியாவின் மாநிலம் ஒன்றை விடவும் மிகச் சிறிய நாடு சிறிலங்கா.
எனவே, நிர்வாக முறையை மாகாணங்களாகப் பிரிக்க வேண்டிய தேவையில்லை.
கடந்த 25 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் மாகாணசபைகளில் நாட்டுக்கு எந்த நன்மையும் கிடைத்து விடவில்லை.
அதிகாரப்பகிர்வு தொடர்பான பொருத்தமான உடன்பாடு செய்யப்படாததால், மத்திய அரசுக்கும் மாகாணசபைகளுக்கும் இடையில் பாடசாலைகள், மருத்துவமனைகள், வீதிகள் போன்ற விவகாரங்களில் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன.
எனினும், வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், மாகாணசபைகளை ஒழிக்க முயன்றால், அது அனைத்துலக சமூகத்துக்கு தவறான சமிக்ஞையை வெளிப்படுத்தும்.
இதனைக் கருத்தில் கொண்டு அதிகாரப்பகிர்வு விடயத்தில் அனைத்துக் கட்சிகளும் குழுக்களும் உகந்தமுறையில் செயற்பட வேண்டும்.
எதிர்காலத்தில் இந்தப் பதவிக்கு வரக்கூடியவரின் நடத்தையை இப்போதே கணிக்க முடியாது என்பதால், தற்போதைய அதிபரின் பதவிக்காலத்திலேயே அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment