Monday, May 6

புதன்கிழமை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்க்கமான முடிவு எடுக்கும்!

Hasan Ali MPஆளும் கட்சி வழங்கிய உறுதிமொழிகளை இன்னும் நிறைவேற்றவில்லை எனவும், எனவே புதன்கிழமை 8ஆம் திகதி நடைபெறும் கட்சியின் உயர்பீடத்தில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி இதுகுறித்து மேலும் கூறுகையில்,
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் ஆளும் கட்சி அங்கு ஆட்சியமைக்க ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உதவியை நாடியது. இதன்போது முஸ்லிம் காங்கிரஸ் பல கோரிக்கைகளை முன்வைத்ததுடன் அரசாங்கமும் பல வாக்குறுதிகளை எமக்கு வழங்கியது.

ஆனால், இதுவரையில் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மாறாக தொடர்ந்தும் பல்வேறு வகையில் அரசியல் ரீதியாக பழிவாங்கல் மற்றும் ஒடுக்கப்படல் போன்ற விடயங்கள் இடம்பெறுகின்றன.
இந்த நிலையில், முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் வீணடிக்கப்படும் நிலையில், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்து தீர்மானம் மேற்கொண்டு அதனை ஜனாதிபதிக்கு அறிவிக்கவுள்ளனர். இந்தக் கூட்டத்தின் போது தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள அசாத் சாலி தொடர்பிலும் பேசப்படவுள்ளது.
அண்மையில் முஸ்லிம் மதத்திற்கு எதிராக நடைபெற்ற வன்முறைகள் தொடர்பில் அசாத் சாலி தீவிரமாக குரல் கொடுத்தார். இந்த நிலையில், அவரைக் கைதுசெய்துள்ளமை முஸ்லிம் மக்களிடையே சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் மீதான விசாரணைகள் வெளிப்படையாக இடம்பெற்று அவரை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment