Monday, May 6

இலங்கையில் பொதுநலவாய மாநாடு, 3.5. பில்லியன் செலவு, 200 சொகுசு வாகனங்கள்


சிறிலங்காவில் வரும் நொவம்பர் மாதம் நடத்தப்படவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டுக்கு, 3.5 பில்லியன் ரூபா செலவு ஏற்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. 
முன்னதாக, இந்த மாநாட்டு ஏற்பாடுகள், ஒருங்கிணைப்புக்கான செலவுகளுக்கு 6 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர், செலவுகளைக் குறைக்க முடிவு செய்யப்பட்டது.  54 நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்காக விடுதிகளில் 4500 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 
விருந்தினர்களின் பயன்பாட்டுக்காக 200 சொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.  அவற்றில் 60 வாகனங்கள் மெர்சிடெஸ் பென்ஸ் சி வகை மற்றும் பிஎம்டபிள்யூ 7 போன்ற மிகப் பிந்திய வடிவங்களைச் சேர்ந்தவையாகும். இவை தவிர, சொகுசு கார்கள், ஜீப்புகள், வான்களும் விருந்தினகர்களின் பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்யப்படவுள்ளன. 
கொமன்வெலத் தலைவர்களின் மாநாடு முடிந்த பின்னர் இந்த சொகுசு வாகனங்கள் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்படும். 
அழைப்பிதழ் அனுப்பும் பணி ஆரம்பம்
வரும் நொவம்பர் 15 தொடக்கம் 17 வரை கொழும்பில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கான அழைப்பிதழ்களை அனுப்பும் பணிகள் அடுத்த இரண்டு வாரங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன. 
இதுவரை எந்தவொரு நாட்டுத் தலைவரும் இந்த மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. 
அழைப்பிதழ்கள் அனுப்ப்ப்படுவதற்கு முன்னதாகவே பல நாடுகள் தமது பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. 
சிறப்பு ஆலோசகராக கலாநிதி இந்திரஜித் நியமனம்
கொழும்பில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சிமாநாட்டு அட்டவணை குறித்த விவகாரங்களுக்கு சிறிலங்கா அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கான ஆலோசகராக பொருளாதார நிபுணர் கலாநிதி இந்திரஜித் குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார். 
சிறிலங்காவின் மூத்த அதிகாரிகள், அதிபர் செயலகம் போன்றவற்றுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றும் நோக்கிலேயே இவரை கொமன்வெல்த் செயலகம், பணிக்கு அமர்த்தியுள்ளது. 
1990 முதல் பொருளாதார விவகாரப் பிரிவுப் பணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்த கலாநிதி இந்திரஜித் குமாரசாமி 2008 இல் கொமன்வெல்த் செயலகத்தில் இருந்து ஓய்வுபெற்றார். 
இவர் ஐ.நாவின் முன்னாள் அடிநிலைச் செயலராகவும், ஆயுத மோதல்களில் சிறார்கள் தொடர்பான ஐ,நாவின் சிறப்பு பிரதிநிதியாகவும் பணியாற்றிய ராதிகா குமாரசாமியின் சகோதரர் ஆவார்.

No comments:

Post a Comment