Tuesday, April 30

கொழும்பில் இனவாதத்திற்கு எதிராக மேதின ஊர்வலம்; தமிழ் பேசும் மக்களுக்கு மனோ அழைப்பு!

Mano (1)கொழும்பில் இன மதவாதத்திற்கு எதிராக ஜனநாயக மக்கள் முன்னணி, நவ சமசமாஜ கட்சி, தேசிய ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள், அரசு-தனியார்துறை தொழிற்சங்கள், வெகுஜன அமைப்புகள், பெண்கள் அமைப்புகளுடன் இணைந்து தலைநகரில் மேதின ஊர்வலத்தையும் கூட்டத்தையும் நடத்த உள்ளன என  ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த ஊர்வலத்திலும், கூட்டத்திலும் கொழும்பில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் அணி திரண்டு கலந்து கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

மனோ கணேசன், விக்கிரமபாகு கருணாரத்ன, அசாத் சாலி ஆகிய கட்சி தலைவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக எம். ஏ. சுமந்திரன் எம்பியும் ஜனநாயக மக்கள் முன்னணியின் மாகாண சபை, மாநகர சபை, நகர சபை மக்கள் பிரதிநிதிகளும், மூன்று கட்சிகளினதும் அங்கத்தவர்களும், ஆதரவாளர்களும் கலந்து கொள்வர்.
இனவாதத்தையும், மதவாதத்தையும் எதிர்க்க இன்று தமிழ், முஸ்லிம் மக்களுடன் பெருந்தொகையான சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களும் எம்முடன் கரங்கோர்த்துள்ளார்கள்.
கொழும்பில் சிங்கள சகோதர மக்களுடன் சமத்துவமாக ஒற்றுமையுடன் வாழ தமிழ், முஸ்லிம் மக்கள் தயார் என்ற செய்தியை நமது கூட்டு மேதினம் மூலம் நாம் அறிவிப்போம்.
ஆகவே இந்த மேதின நிகழ்வில் கொழும்பில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் அணிதிரண்டு கலந்து கொண்டு எங்கள் கரங்களை பலப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன்.
மே முதலாம் திகதி நண்பகல் 1 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை குணசிங்கபுர பிரைஸ் பார்க் பூங்கா மைதானத்தில் இருந்து ஊர்வலம் ஆரம்பித்து மத்திய கொழும்பு நகர வீதிகள் வழியாக சென்று மீண்டும் பிரைஸ் பார்க் பூங்கா மைதானத்துக்கு திரும்பி அங்கு மேதின பொதுக் கூட்டம் நடைபெறும்.
எனவே மே முதலாம் திகதி நண்பகல் 12 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை குணசிங்கபுர பிரைஸ் பார்க் பூங்கா மைதானத்திற்கு வரும்படி தமிழ், முஸ்லிம் மக்களை அன்புடன் அழைக்கின்றேன்.

No comments:

Post a Comment