Sunday, April 28

ஜெய்லானியில் கட்டடங்கள் அகற்றப்படுவது குறித்த செய்தி உண்மைக்குப் புறம்பானது

Kuragalaஜெய்லானி, கூரகல பகுதியிலுள்ள முஸ்லிம் வழிபாட்டுத் தளங்களிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான கட்டடங்கள் அகற்றப்படுவதாக வெளியான செய்தியை தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையைச் சேர்ந்த றொசானா அபுசாலி மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நமணிக்கு கருத்து தெரிவிக்கும்போது, நேற்று வெள்ளிக்கிழமை கூரகல பகுதியிலுள்ள முஸ்லிம் கட்டடங்களை அகற்றுவதற்காக அப்பகுதிக்கு சிவில் பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்தச் செய்தி உண்மைக்குப் புறம்பானது.

அங்கு சட்டவிரோதமாக கடைகளை வைத்திருந்த ஒருசிலர் முஸ்லிம் வர்த்தகர்கள் தங்களது கடைகளை ஏற்கனவே அகற்றியுள்ளனர். பள்ளிவாசலுக்கு சொந்தமான காணியில் இவர்கள் கடைகளை வைத்திருந்தனர். இதுதொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் இவர்கள் அப்பகுதியில் சட்டவிரோதமாக கடைகளை வைத்திருப்பது உறுதிசெய்யப்பட்டு அங்குள்ள கடைகளை அவர்கள் தங்களது சம்மதத்துடன் அகற்றிச் சென்றுவிட்டனர்.
பொதுபல சேனா அமைப்பு கூரகல பகுதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசலை அகற்றுமாறு கண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அறிவித்திருந்தது. அதற்கு சமரசத் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட குழுவினர் அண்மையில் அப்பகுதிக்கு விஜயம் செய்து அங்குள்ள பள்ளிவாசல் அகற்றப்படமாட்டாது என உறுதியளித்திருந்தார்.
இப்பகுதியில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படாத வகையில் ஒரு தொல்பொருள் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது. அத்துடன் பள்ளிவாசல் அகற்றப்படமாட்டாது என்ற உறுதிமொழியும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இங்கு பள்ளிவாசல் அகற்றப்படபோவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை.
இங்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தங்களது அகழ்வாராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். மற்றும்படி இங்கு வேறெதுவும் பிரச்சினைகள் இல்லையென றொசானா அபுசாலி மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment