Saturday, March 30

முஸ்லிம் ஊடகவியலாளர்கள்தான் இனவாத SMS களை அனுப்புகிறார்களாம் !!


1 வெளிநாடுகளில் இருந்து செயற்படுகின்ற தேசத் துரோகச் சக்திகளும் சில சர்வதேச செய்தி நிறுவனங்களுமே இலங்கையில் நடக்கின்ற வன்முறைகள் தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் மீது சேறு பூசுவதாக அந்த அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் கூறுகிறார்.அண்மைக் காலங்களாக இலங்கையில் நடந்துவருகின்ற வன்முறைச் சம்பவங்களுடன் தமது அமைப்பை தொடர்புபடுத்தும் முயற்சிகள் நடந்துவருவதாகவும் ஞானசார தேரர் தெரிவித்தார்.
இதேவேளை, எந்தவொரு நாட்டிலும் வன்முறைகள் நடப்பது இயல்பு என்றும் இவ்வாறான வன்முறைகளுக்கு சிலர் இனவாத சாயம் பூசுவதாகவும் அவர் கூறினார்.அத்துடன், பௌத்த மத அமைப்புகளுக்கு அவதூறு ஏற்படுத்தும் நோக்கோடு வேற்று மதத்தவர்கள் பௌத்த பிக்குகளைப் போல உடையணிந்து தவறான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்றும் ஞானசார தேரர் குற்றஞ்சாட்டினார்.

இலங்கையில் முஸ்லிம் கடைகளில் பொருள்வாங்க வேண்டாம் என்றும், முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் தொலைபேசிகளில் எஸ்எஸ்எம் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. இதுபற்றி கேள்வி எழுப்பியபோது, இலங்கையில் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சிலரே இப்படியான தொலைபேசி எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகள் மூலமும் டுவிட்டர் போன்ற இணையதளங்கள் ஊடாகவும் இனவாத செய்திகளைப் பரப்பிவருவதாகவும் அவர்களை பாதுகாப்புத் தரப்பினர் அடையாளம் கண்டுள்ளதாகவும் பொது பல சேனா அமைப்பு கூறுகிறது.
பொது பல சேனா அமைப்பே நாட்டில் இனவாதக் கருத்துக்களை தூண்டிவருவதாக பல தரப்பினரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.அந்த அமைப்புக்கு அரசின் உயர்மட்டத்திலிருந்து பண உதவி கிடைப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அண்மையில் குற்றஞ்சாட்டினார்.
நாட்டின் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமும் பொது பல சேனா அமைப்பின் ஞானசார தேரரே ஃபெஷன் பக் நிறுவனத்தின் மீதான தாக்குதலை அண்மையில் தூண்டியிருந்ததாக குற்றஞ்சாட்டுகிறார்.பொது பல சேனா அமைப்பின் பயிற்சிக் கூடமொன்றின் திறப்பு விழாவில் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்ட நிகழ்வையும் ரவூப் ஹக்கீம் விமர்சித்தார்.

No comments:

Post a Comment