Saturday, March 30

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பொலிஸ் முயற்சி - றம்ழான்

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பொலிஸ் முயற்சி - றம்ழான்



 
 
 
 
 
 
பெப்பிலியான நகர வர்த்தக நிலையம் மீதான தாக்குதல் ஒரு காதல் விவகாரத்தின் பின்னணியே என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பந்துல சிரிவர்தன கூறுவது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமனானது என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இத்தாக்குதலின் பின்னணி காதல் விவகாரம்தான் என்பதை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பந்துல சிரிவர்தன நிரூபிக்க முடியுமா? நன்கு திட்டமிடப்பட்டு ஒரு பௌத்த விகாரையிலிருந்து 200க்கும் மேற்பட்டவர்களும் 10க்கும் மேற்பட்ட காவியுடை பயங்கரவாதிகளும் குழுவாக வந்து பாரியளவில் தாக்குதல்களை நடாத்தி மிகப்பாரிய சேதத்தினை ஏற்படுத்தி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீதும் தாக்குதல் நடாத்தியதோடு சில பொருட்களை தீயிட்டும் கொழுத்தியுள்ளனர்.

அதனை பொறுப்புள்ள பாதுகாப்பு தரப்பினர் தடுத்து நிறுத்துவதை விட்டு விட்டு இதனை உண்மைக்குப் புறம்பாக ஒரு காதல் விவகாரமாக சித்தரித்து திசைதிருப்ப நினைப்பது வேடிக்கையாக உள்ளது.

அவ்வாறு, அது ஒரு காதல் விவகாரமாக இருந்தாலும் கூட அதற்காக ஒரு வர்த்தக நிலையத்தின் மீது இவ்வாறானதொரு வெறித்தனமான தாக்குதலை இரவு நேரத்தில் குழுவாக வந்து நடாத்த முடியுமா ?

இவ்வாறு ஒரு காதல் விவகாரத்திற்காக ஒரு வர்தக நிலையம் முற்றுகை இடப்பட்டு தாக்குதல் நடாத்தப்படது இதுவே முதற்தடவையாக இருக்கும் என் நான் நினைக்கின்றேன்.

அவ்வாறானதொரு தாக்குதலுக்கு பாதுகாப்பு தரப்பு இடமளிக்கலாமா ? இந்த நாட்டில் பாதுகாப்பு தரப்பு அனைத்து இனங்களுக்கும் பொதுவானதகவே செயற்பட வேண்டும் எந்தவொரு இனத்திற்கும் எதிராகவோ அல்லது ஆதரவாகவோ செயற்பட முடியாது.

இதுவிடயத்தில் காட்டுமிரன்டித்தனமான தாக்குகளை நடாத்தியவர்களை உடனடியாக கைது செய்து நீதிக்கு முன் நிறுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் பாதுகாப்பு தரப்பின் சீருடை மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை கேள்விக்குறியாகி விடும்.

அண்மைக்காலமாக முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு நடாத்தப்படும் தாக்குதல்களை பாதுகாப்பு தரப்பினர் உரிய நேரத்தில் தடுக்கத்தவறி விட்டனர். அதன் விளைவே இன்று இவ்வாறான தாக்குதல்கள் தொடர்வதாக குற்றச்சாட்டுக்கள் பாரவலாக பலராலும் பேசப்பட்டு வருகின்றது.

அதனை இல்லாது செய்து மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். பொலிஸார் பாரபட்சமின்றி சம்மந்தப்பட்டவர்கள் எவராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களை தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.

இதுவிடயத்தில் பின்னணியில் இருந்து இயங்கும் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரையும் அவரோடு இணைந்து செயற்படும் முக்கியஸ்தர்களையும் கைது செய்து நீதிக்கு முன் நிறுத்தினால் மட்டுமே இந்த நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான மத அடக்குமுறையை முழுமையாக தடுத்து நிறுத்த முடியும். எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment