Wednesday, February 27

அரசு இன்று முஸ்லிம்களை ஓட ஓட விரட்டி தேடித் தேடி அவமானப்படுத்துகிறது - மனோ அரசு இன்று முஸ்லிம்களை ஓட ஓட விரட்டி தேடித் தேடி அவமானப்படுத்துகிறது - மனோ

அரசு இன்று முஸ்லிம்களை ஓட ஓட விரட்டி தேடித் தேடி அவமானப்படுத்துகிறது - மனோ

ஐநா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சென்று முறையிட்டு, நீதிகேட்க தமிழருக்குள்ள உரிமையில் எவரும் தலையிட முடியாது. எமது இந்த உரிமையில் அரசாங்கம் குற்றம் காண முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் நமது மனித உரிமை அமைப்புகள், ஜெனீவா சென்று செயற்படுவதை ஜனநாயக மக்கள் முன்னணியும், இன்று இங்கே இந்த மேடையில் எம்முடன் கரம் கோர்த்துள்ள அனைத்து கட்சிகளும் முழுமையாக அங்கீகரிக்கின்றன, ஆதரிக்கின்றன, வலியுறுத்தி நிற்கின்றன என்பதை எந்தவித தயக்கமுமின்றி மிகத்தெளிவாக, உறுதிபட கூறிவைக்க விரும்புகின்றேன்.

எம்மை குறை கூறுபவர்கள், முதலில் தம்மை திருத்தி, இந்நாட்டில் தமிழரும், முஸ்லிம்களும் சமத்துவத்துடன் நியாயமாக வாழும் நடைமுறையை உறுதிப்படுத்தட்டும். இதை செய்யாமல் எம்மை, உலகத்திடம் முறையிடாதீர்கள் என்று சொல்லுபவர்களை நாம் நிராகரிக்கிறோம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தமிழ், சிங்கள மொழிகளில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இன்று இந்நாட்டில் எந்த பக்கம் திரும்பினாலும் "ஜெனீவா, ஜெனீவா" என்ற கோஷமே கேட்கிறது. நான் இரண்டு மாதங்களுக்கு முன்னர் சொன்னது போல் இன்று இந்நாட்டை ஜெனீவா காய்ச்சல் கடுமையாக பிடித்துள்ளது.

நமது இந்த, அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கத்தின் பங்காளிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று ஜெனீவா சென்றுள்ளது. இதை இன்று அரசாங்க ஊடக பேச்சாளரும், அமைச்சர்களும் நாட்டை அவப்பெயருக்கு உள்ளாக்கும் செயல் என்று குற்றம் சாட்டுகிறார்கள். அரசு ஆதரவுடன் செயல்படும் பல்வேறு இனவாத இயக்கங்கள் நாட்டை காட்டிகொடுக்கும் செயல் என்று கூக்குரல் இடுகிறார்கள்.

இது நாட்டை காட்டி கொடுக்கும் செயல் அல்ல. இது எங்கள் அடிப்படை உரிமை. இதை நாம் விட்டுக்கொடுக்க முடியாது. 1989களில் அன்றைய எதிர்க்கட்சி உறுப்பினர் மகிந்த ராஜபக்ச, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தெற்கின் சிங்கள மக்களின் மனித உரிமை கோரிக்கைகளை எடுத்துகொண்டு ஜெனீவா சென்றது நியாயம் என்றால் அதை இன்று ஏன் எம்மால் எமது மக்களுக்காக செய்ய முடியாது என்ற எனது கேள்வியை இங்குள்ள சிங்கள ஊடக நண்பர்கள் சிங்கள மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்.

2012ம் கூட்டமைப்பு ஜெனீவா செல்லவில்லை. அதனால் கூட்டமைப்பை தமிழ் தீவிரவாதிகள் விமர்சித்தார்கள். புலம்பெயர்ந்த தமிழர் மத்தியிலும் பெரும் எதிர்ப்பு குரல் எழுந்தது. அந்த வேளையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முதன்முறையாக ஐநாவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அன்று தமிழர் பிரதிநிதிகள் இலங்கையிலிருந்து ஜெனீவா செல்லாமல், தவிர்த்துகொண்டதன் மூலம் இலங்கை அரசுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. நமது பிரச்சினைகளை நமது நாட்டுக்கு உள்ளேயே பேசி தீர்த்து கொள்வோம் என்ற ஒரு சமிக்ஞை இலங்கை அரசாங்கத்துக்கு காட்டப்பட்டது.

இங்கே எனது பக்கத்தில் அமர்ந்திருக்கும் நண்பர் அசாத் சாலி கடந்த ஜெனீவா காலத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்பட்டு தமது இனத்தின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முயன்றார். ஆனால் அது நடக்கவில்லை. அவரது நம்பிக்கை நிறைவேறவில்லை. அரசாங்கம் இன்று முஸ்லிம் மக்களையும் ஓட ஓட விரட்டுகிறது. அவர்களை தேடி, தேடி அவமானப்படுத்துகின்றது. இதனால் இன்று அசாத் சாலியும் எங்களுடன் கரங்கோர்த்துள்ளார். முஸ்லிம் மக்கள் இன்று அரசாங்கத்தின் மீது கடும் வெறுப்பு கொண்டுள்ளார்கள். இதுதான் முஸ்லிம் மக்களின் இன்றைய மனோ உணர்வு. அதை இன்று அவர் எங்களுடன் இணைந்து பிரதிநிதித்துவம் செய்கிறார்.

தமிழர்களும், முஸ்லிம்களும், ஐநா சபையும் இந்த அரசாங்கத்துக்கு வழங்கிய சந்தர்ப்பங்களை இந்த முட்டாள் அரசாங்கம் புரிந்துகொண்டு செயற்படவில்லை. தமது சொந்த தயாரிப்பான, கற்றுக்கொண்ட ஆணைக்குழு பரிந்துரைகளைகூட இதுவரை இந்த அரசு அமுல் செய்யவில்லை. இதை அமுல் செய்கிறேன் என்று தான் இவர்கள் ஐநாவில் சூடம் கொளுத்தி சத்தியம் செய்து வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை.

கடந்த அறுபத்தி ஐந்து வருடங்களாக இந்த நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் தமிழ் தலைவர்களுக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒப்பந்தங்கள் செய்து கைகுலுக்கிவிட்டு, கிழித்து எறிந்தார்கள். உள்நாட்டில் நம்மை ஆண்ட ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டு கட்சி அரசாங்க பிரதமர்களும் இதையே தமிழருக்கு செய்தார்கள்.

ஆனால் தமிழரை ஏமாற்றியதைப்போல், இன்று உலகத்தை ஏமாற்ற முடியாது என்பதை இந்த அரசாங்கம் உணர வேண்டும். எம்முடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை கைகுலுக்கி, கிழித்தெறிந்ததைபோல், கற்றுகொண்ட ஆணைக்குழு பரிந்துரைகளை கிழித்தெறிய முடியாது என்பதையும், ஐநாவுக்கும், உலகத்துக்கும் வழங்கிய மனித உரிமை, அதிகாரப்பகிர்வு ஆகியவை சம்பந்தமான வாக்குறுதிகளை மீற முடியாது என்பதையும் இந்த அரசாங்கம் இனியாவது தெரிந்துகொள்ளவேண்டும்.

இந்த சூழ்நிலையில், ஐநாவுக்கு செல்லாதீர்கள் என்று எங்களை சொல்லாதீர்கள். எமக்கும் எமது உள்நாட்டு சிக்கல்களை எடுத்துகொண்டு வெளிநாட்டுக்காரனிடம் ஓடி சென்று முறையிட விருப்பம் இல்லைதான். ஆனால், என்னசெய்வது? அந்த சூழ்நிலையை நீங்கள்தான் உருவாக்கிவிட்டுள்ளீர்கள். நியாயமாக நடந்துகொள்ளுங்கள். ஐக்கிய இலங்கைக்குள், அதிகாரத்தை பகிர்ந்து நாம் சமத்துமாக வாழும் உரிமையை அங்கீகரியுங்கள். எமக்கு உலகத்தை தேடி சென்று முறையிடும், தேவை இருக்காது.

No comments:

Post a Comment