Wednesday, January 30

NDT கற்கை நெறி ஹோமாகமவிற்கு மாற்றம்!!!


என்.டி.ரி.  ன அழைக்கப்படும் தொழில்நுட்பத்தில் தேசிய டிப்ளோமா கற்கை நெறியை ஹோமாகமவில் நடத்துவதற்கு மொறட்டுவ பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது.

அண்மையில் மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலினால் பல மாணவர்கள் கடுமையாக காயமடைந்ததுடன் பல்கலைக்கழக சொத்துகளும் மோசமாக பாதிக்கப்பட்டன. இவ்வாறான செயற்பாடுகள் இனிமேலும் நடைபெறாமல் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மொறட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் மீது கடந்த ஜனவரி 16ஆம் திகதி சுமார் 700 தொழில்நுட்பத்தில் தேசிய டிப்ளோமா மாணவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனால் பொறியியல் பீடத்தை மூட வேண்டியதாயிற்று.

தொழில்நுட்பத்தில் தேசிய டிப்ளோமா கற்கை நெறிக்கான புதிய கட்டிடம் அமைக்கும் வேலைகள் நடைபெறுவதாக மொறட்டுவ பல்கலைக்கழக உப வேந்தர் எ.கே.டப்ளியூ.ஜயவர்த்ன தெரிவித்தார்.

இது நீண்ட கால திட்டமெனவும் மோதல் காரணமாக அவசரமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்ல எனவும் பேராசிரியர் ஜயவர்த்தன குறிப்பிட்டார்.

இந்த மோதலினால் பல்கலைக்கழகத்திற்கு ஒரு மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் மூளை கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு பொறியியல் பீட மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த தாக்குதலுக்கு காரணமான மாணவர்களை இனம் காண்பதற்காக பொலிஸ் விசாரணையும் உள்ளக பல்கலைக்கழக விசாரணையும் நடைபெறுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment