Thursday, July 5

யுத்தத்தில் சரணடைந்த புலிகளை கொன்றிருந்தால் இந்தநிலை வந்திருக்குமா?- கோத்தபாய ராஜபக்ச சீற்றம்


வன்னியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடையும் புலிகளின் தலைவர்களை கொன்று விடுமாறு விடுக்கப்பட்ட உத்தரவை நிறைவேற்றியிருந்தால், இந்த நிலை வந்திருக்குமா என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ...
..மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவைக் கண்டித்துள்ளதாக ‘லங்கா நியூஸ்வெப்‘ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் வவுனியா சிறையில் சிறைக்கைதிகள், சிறை அதிகாரிகளை பணயமாக வைத்திருந்தமைக்கே பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற சம்பவங்கள் விடுதலைப் புலிகளின் அனைத்துலக பிரிவுக்கு, அந்த அமைப்பு இன்னும் செயற்பாட்டு நிலையில் உள்ளது என்ற உணர்வை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வன்னிப் போர் நடவடிக்கையின் போது மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா 55 மற்றும் 59வது டிவிசன்களுக்குத் தலைமை தாங்கியவர். இந்த இரு படைப்பிரிவுகளும் வெற்றிலைக் கேணியில் இருந்தும், முல்லைத்தீவில் இருந்தும் நகர்வுகளை மேற்கொண்டிருந்தன.
இந்நிலையில், 59வது டிவிசனால் கைது செய்யப்பட்ட கடற்புலித் தலைவரான சசிக்குமார் என்பவரே, கடந்தவாரம் வவுனியா சிறைக் கலவரத்துக்குத் தலைமை தாங்கியிருந்தார்.
வன்னிப் போர் நடவடிக்கையின் போது, கைது செய்யப்படும் அல்லது சரணடையும் விடுதலைப் புலிகள் இயக்கச் செயற்பாட்டாளர்கள் அனைவரையும் கொன்று விடும்படி கோத்தபாய ராஜபக்ச தனிப்பட்ட ரீதியாக எல்லாப் படைப்பிரிவுகளினது தளபதிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண தலைமையிலான நந்திக்கடல் பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 53வது டிவிசன், கைது செய்த சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவைச் சேர்ந்த 303 புலிகள் கொலை செய்யப்பட்டனர்.
வன்னிப் படை நடவடிக்கையின் போது, புலிகளின் உயர்மட்டத் தலைவர்களும் கூட கொலை செய்யப்பட்டனர். சாதாரண போராளிகள் மட்டும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதேவேளை, போரின் இறுதிக்கட்டத்தில் வெள்ளைக்கொடியுடன் சரணடைய முன்வந்த புலிகளின் தலைவர்கள் நடேசன், புலித்தேவன் போன்றோரை 58வது டிவிசன் தளபதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா படுகொலை செய்திருந்தார்.
எனினும், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் அந்த உத்தரவைப் பின்பற்றவில்லை. அவர் கைது செய்த ஒவ்வொரு புலிகள் பற்றிய விபரங்களையும் பதிவு செய்து, எழுத்துமூல, ஒளிப்படப் பதிவுகளுடன் இராணுவக் காவல்துறையிடம் ஒப்படைத்திருந்தார் அவ் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இறுதிக்கட்டப் போரின் போது பொதுமக்கள் மீதான பீரங்கித் தாக்குதல்கள், நீதிக்குப் புறம்பான படுகொலைகள் உள்ளிட்ட போர்க்குற்றங்களை புரிந்தாக மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா மீது பிரித்தானியாவில் போர்க்குற்ற வழக்குப் பதிவு செய்யப்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அங்கிருந்து நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment