Tuesday, November 1

மீறினால் சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்வேன். மிரட்டல் விடுக்கிறார் முன்னாள் பிரத நீதியரசர்


அதிகாரத் துஷ்பிரயோகம் என்பது எனது பதவிக் காலத்தில் இடம்பெறவில்லை. இதற்கு ஜனாதிபதியின் கடிதம் நற்சான்று பகர்கின்றது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்தார். தன் மீதான நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் ரீதியிலான பழிவாங்கலாகும் எனவும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவில்லை என்ற காரணத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கோட்டே சோலிஸ் ஹோட்டலில் கடந்த ஞாயிறுறுக்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டிலேயே முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கமும் அதன் 75 எம்.பிக்களும் இணைந்து எனக்கு எதிராக பாராளுமன்றத்திற்குக் கொண்டு வந்துள்ள பிரேரணையானது இலங்கை அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது. இது ஓர் அரசியல் பழிவாங்கலும் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயற்பாடுமாகும். அதிகாரத் துஷ்பிரயோகம் என்பது எனது பதவிக் காலத்தில் இடம்பெறவில்லை. இதற்கு ஜனாதிபதியின் கடிதம் நற்சான்று பகர்கின்றது.

1968ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் திகதி வரையில் அரச நீதித்துறையில் கடமை புரிந்துள்ளேன். நான் பதவி வகித்த காலப்பகுதியில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ள ஆளும் தரப்பினர் பாராளுமன்றத்தில் எனக்கெதிராக விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமெனக் கோரியுள்ளனர்.

இவ்வாறான பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்படுவதானது இலங்கை அரசியலமைப்புக்கு புறம்பானதும் மீறுகின்றதுமான செயற்பாடாகும். பிரதம நீதியரசர் ஒருவர் பதவியில் இருக்கும்போது அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்று உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் உயரிய இடமான பாராளுமன்றத்தினூடாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவரை பதவி விலக்க முடியும்.

ஆனாலும் தற்போது என்னை அவ்வாறு செய்ய முடியாது. ஏனெனில் நான் தற்போது எந்தப் பதவியிலும் இல்லை. மேலும் 2009 ஜூலை மாதம் 7ஆம் திகதி நான் ஓய்வுபெற்றுவிட்டேன். தற்போது இருக்கின்ற 14ஆவது தடவை தெரிவான பாராளுமன்றத்துக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. நான் அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டிருந்தால் நான் பதவி வகித்த காலப்பகுதியில் இருந்த 13ஆவது பாராளுமன்றமே என் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இடம் பெறவில்லை. அன்று ஜனாதிபதி எனது சேவையைப் பாராட்டி நற்சான்று வழங்கியுள்ளார்.

எனது நாடு எனது மக்கள் என்ற வகையில்தான் இந்த சட்டத்துக்கு முரணான செயற்பாட்டை ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்பினேன். இது எனது முதற்கட்டப் பணியாகும். இவ்விடயம் கவனத்திற் கொள்ளப்படவில்லையெனில் இதனை சர்வதேச நீதிமன்றம் வரையில் கொண்டு செல்வதற்கும் முயற்சிப்பேன் என்றார்.

No comments:

Post a Comment