Thursday, November 24

குழந்தைகள் இல்லத்தில் 31 கர்ப்பிணிகள் - வெளிநாட்டுக்கும் விற்பனை

 

மொறட்டுவை - ராவணாவத்தை பகுதியில் குழந்தைகள் இல்லம் நடத்திச் செல்வதாகக்கூறி வெளிநாடுகளுக்கு சிறுவர்களை விற்பனை செய்யும் வர்த்தகம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

முற்றுகையிடப்பட்ட இடம் குழந்தைகள் இல்லம் என பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த இல்லத்தில் 42 குழந்தைகள் மாத்திரமே இருப்பதாக கூறப்பட்டிருந்த போதும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் நடத்திய சோதனையின்போது அங்கு 63 குழந்தைகள் இருந்துள்ளன.
அத்துடன் கர்ப்பிணித் தாய்மார்கள் 31 பேரும் அவ்வில்லத்தில் இருந்ததாக அனோமா திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். மொறட்டுவை - ராவணாவத்தை பகுதியில் நடத்திச் செல்லப்பட்டு வந்த இக்குழந்தைகள் இல்லம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்த இரகசிய பொலிஸாரின் உதவி தேவை என பொலிஸ் மா அதிபரிடம் கோரியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment