Sunday, September 11

மர்ம மனிதர் நடமாட்டம்! இரு படையினரை மடக்கினர் மக்கள்! நேற்றிரவு அப்பகுதியில் பதற்றம்!


[ ஞாயிற்றுக்கிழமை, 11 செப்ரெம்பர் 2011, 06:01.57 AM GMT ]
யாழ். சுழிபுரம் பிரதேசத்தில் உள்ள தொல்புரம் மத்தி பகுதியில் மர்மமனிதர்களின் நடமாட்டத்தை அடுத்து இராணுவத்தினர் இருவர் பொதுமக்களால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் தொல்புரம் அமெரிக்க மிஷன் பாடசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்துக்கு இரவு 10 மணியளவில் வந்த பொலிஸாரும், இராணுவத்தினரும் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆறு இளைஞர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
தொல்புரம் அமெரிக்க மிஷன் பாடசாலைக்கு சமீபமாக மர்ம மனிதர்கள் நால்வரின் நடமாட்டத்தை பொதுமக்கள் அவதானித்துள்ளனர். பின்னர் அவர்களை பிரதேச மக்கள் கலைத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் ஓடித் தப்பிவிட்டனர்.



அவ்வேளை அவர்கள் தப்பிச் சென்ற ஒழுங்கை வழியாக சுழிபுரம் இராணுவ முகாமைச் சேர்ந்த இரு படையினர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அவர்கள் மீது சந்தேகப்பட்ட பொதுமக்கள் இரு இராணுவத்தினரையும் பிடித்து வீடொன்றினுள் பூட்டி வைத்தனர்.
இதன்பின்னர் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இரவு 10 மணியளவில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் வீதிகளில் நின்றிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களை விரட்டியடித்தனர். அத்துடன் இரு படையினரையும் மீட்டனர்.
இராணுவத்தினரைப் பிடித்து மறித்து வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அந்தப் பகுதி இளைஞர்கள் ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரியவந்தது.
ஆனால் அதனை ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை. இதனால் தொல்புரம் பகுதி மக்கள் மத்தியில் நேற்றிரவு பதற்றமும் பரபரப்பும் நிலவின.

No comments:

Post a Comment