Wednesday, July 20

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று விளையாட்டு அரங்கா தேவை? ரணில்

[ புதன்கிழமை, 20 யூலை 2011, 02:59.02 AM GMT ]
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்த வடக்கு மக்களுக்கு இன்று தேவைப்படுவது 325 மில்லியன் ரூபா செலவில் நவீன விளையாட்டரங்கு அல்ல, அடிப்படைத் தேவைகளான வீடு மற்றும் வாழ்வாதாரமே. இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 
தமிழ் ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசிய எதிர்க் கட்சித்தலைவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:

விளையாட்டு அரங்குகளை நிர்மாணிப்பதன் மூலம் உழைக்கத் திட்டமிடுகின்றனர். வடக்கில் யுத்தத்தால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு உடனடித்தேவை என்னவென்பதை அரசு உணரவில்லை.
மக்கள் சுகபோகம் அனுபவிக்கின்றனர் என எண்ணிக் கொண்டு, அரசு கிளிநொச்சியில் 325 மில்லியன் ரூபா செலவில் நவீன விளையாட்டரங்கை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளது.
யாழ். குடாநாட்டில் உயர்பாதுகாப்பு வலயங்கள் இன்னும் அகற்றப்படவில்லை. அங்கு வாழ்ந்த மக்கள் இன்றுவரை மீள்குடியமர்த்தப்படவில்லை. ஜனாதிபதித் தேர்தலின்போது பிரசாரத்துக்கென யாழ். குடாநாட்டுக்குச் சென்ற ஜனாதிபதி உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.
பொது வேட்பாளர் சரத் பொன்சேகா இந்த வாக்குறுதியை இதற்கு முன்னரே வழங்கியிருந்தார். ஆனால், பதவிக்கு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
வெறுமனே யாழ். குடாநாட்டில் மூடப்பட்ட வீதிகளைத் திறப்பதால் எதுவித பயனும் இல்லை. உயர் பாதுகாப்பு வலயத்தைக் குறைத்து அங்கு வாழ்ந்த மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment