Sunday, March 10

சூடுபிடிக்கும் “ஹலால்” சான்றிதழ் விவகாரம்


ஹலால் சான்றிதழ் விலக்கப்படுமா? இல்லையா? எனும் கேள்வி மேலெழுந்து வரும் நிலையில் நாளைய ஊடகவியலாளர் மாநாடு இடம்பெறவிருக்கிறது.
அடிப்படையில் ஹலால் சான்றிதழ் வழங்கல் விவகாரத்தை அதைக் கையில் எடுத்த முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள் தவறாகக் கையாண்டதாகவே பெரும்பாலும் குற்றஞ்சாட்டப்படும் இவ்வேளையில் உள்நாட்டுச் சந்தைப்பொருட்களில் ஹலால் சின்னம் பொறிக்கப்படுவது நிறுத்தப்படும் என்று நம்பகரமாக வட்டாரங்கள் தகவல்கள் வழங்கியுள்ளன.
எனினும், வர்த்தக நலன் காப்பதற்காக வெளிநாட்டு ஏற்றுமதிப் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் முறை தொடரப்படவேண்டும் என்பது அரச தரப்பில் தரப்படும் நிர்ப்பந்தமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கான கட்டணமும் அறவிடப்படாது என்றே அறியப்படினும் இது குறித்த முழு விபரங்கள் நாளைய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இலங்கையில் சந்தைக்கு விடப்படும் பொருட்களில் ஹலால் சின்னம் இடம்பெறாது என்பது ஏறத்தாழ ஊர்ஜிதமாகியுள்ள நிலையில் அதற்கு மாற்றீடாக வெளிநாடுகளில் போன்று பொருட்களில் “Ingredients” விபரங்கள் அதாவது பொருள் தயாரிப்புக் கலவையின் விபரங்கள் ஒட்டப்படும் எனவும் அறிய முடிகிறது.
இதனைக் கொண்டு ஒரு சில பொருட்களின் “ஹலால்” தன்மையை அறிந்து கொள்ள வேண்டிய பொறுப்பை சமூகம் ஏற்றுக்கொள்ளும் அதே வேளை தற்போது சந்தையில் காணப்படும் ஹலால் சான்றிதழ் பொறிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் ஏற்கனவே தயாரிப்பில் இருக்கும் பொருட்கள் தொடர்பில் அவை விற்றுத் தீர்க்கப்படும் வரை அவ்வாறே தொடர்வதற்கான அனுமதியும் வழங்கப்படும் எனவும் அறியப்படுகிறது.
இந்த செயற்பாட்டிற்கு நாளைய ஊடகவியலாளர் மாநாட்டில் “இணக்கப்பாடு” என்று பெயர் சூட்டப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹலால் சான்றிதழ் வழங்கலில் ஏற்பட்ட நிர்ப்பந்தம் ஆரம்பத்திலேயே தூர நோக்கோடு கையாளப்படாததன் விளைவாகவே இது மென்மேலும் சர்ச்சைக்குள்ளாகும் விடயமாக வளர்ந்து வந்ததாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளதுடன் நாளைய முடிவுகளாவது தெளிவான நிலைப்பாட்டைத் தெரிவித்து இந்த விடயத்திற்கு ஒரு முடிவு வருவது நல்லது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
பொறுத்திருந்துதான் “கேட்க” வேண்டும் !

No comments:

Post a Comment