Thursday, March 21

பொத்துவில் ஹர்த்தால் வாபஸ் பெறப்பட்டது கவலைதருகிறது : முபாறக்

பொத்துவிலில் 200 அடி சிலைவைப்பு சம்பந்தமான பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டதாக முஸ்லிம் காங்கிரசினால் விடுத்த செய்தி பொய்யானது என்பதை ஹர்த்தாலுக்கான மக்களின் அழைப்பு வெளிக்காட்டுகிறது என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அண்மைக்காலமாக நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் பொத்துவிலில் சிலை வைத்தல் என்ற போர்வையில் நில ஆக்கிரிப்பும், முஸ்லிம்களை பொத்துவிலில் இருந்து விரட்டுவதற்குமான சதி நடைபெற்று வருகிறது. இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்டுப்பாட்டிலுள்ள முதுகெலும்பற்ற பிரதேச சபையாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. கடைசியில் மக்கள் இவற்றுக்கெதிராக கொதித்தெழுந்த போது அப்பகுதிக்கு விஜயம் செய்த மு. கா தலைவர் ரஊப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் மக்களை சமாளித்ததோடு  இவ்வாறு இனி நடைபெறாது என தெரிவித்தனர். இந்த ஏமாற்று நடவடிக்கையை புரியாத மக்கள் இப்பிரச்சினையை முஸ்லிம் காங்கிரஸ் தீர்த்து வைத்து விட்டது என கூறி அக்கட்சிக்கு நன்றி தெரிவித்தனர்.

ஆனால் யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்ன என்பது போல்  பேரினவாதம் வரும் பின்னே மு. கா குழு வரும் முன்னே என்பது போன்ற ஏமாற்று வேலை என்பதை வழமை போன்ற தாமதாகவே புரிந்து கொண்ட முஸ்லிம்கள் இத்தகைய சிலை வைப்புக்கு எதிராக ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தனர். இதனால் அச்சப்பட்டு போன பேரினவாதிகளின் கைக்கூலிகள் பொத்துவிலில் உள்ள தமது கைக்கூலிகள் மூலமாக மக்களை சமாளித்து ஹர்த்தாலை வாபஸ் பெற வைத்துள்ளனர்.

ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்து விட்டு என்ன நோக்கத்திற்காக அது அழைப்பு விடுக்கப்பட்டதோ அது இன்னமும் தீர்க்கப்படாத நிலையில்; வாபஸ் பெறப்பட்டுள்ளமை கவலை தருகிறது. இத்தகைய செயல்கள் இன்னுமின்னும் பேரினவாதத்துக்கு பலம் கொடுப்பதோடு முஸ்லிம்கள் வெறும் வாய்வீரர்கள் என்ற கருத்தே மேலோங்கும். இவ்வாறு ஹர்த்தாலை வாபஸ் வாங்கி மூக்குடைவதை விட அதற்கு அழைப்பு விடுக்காமலேயே இருந்திருக்கலாம் என முபாறக் மௌலவி தெரிவித்தார்.

No comments:

Post a Comment