மார்ச் மாத இறுதிக்குள் ஹலால் நடைமுறையை இல்லாதொழிக்க வேண்டும்.
ஒவ்வொரு சிங்களவர்களும் நாட்டைப் பாதுகாக்கும் உத்தியோகபூர்வமற்ற பொலிஸ்காரர்களாக மாற வேண்டும்.
சிங்களவர்களைப் பாதுகாக்க நிறைவேற்றப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க
மஹரகம தீர்மானத்தைக் கவனத்திற்கொண்டு, மஹிந்த ராஜபக்ஷ அரசு
சிங்களவர்களைப் பாதுகாக்க வேண்டும்.
இக்கோரிககைகளை நிறைவேற்ற அரசுக்கு ஒருமாத காலக்கெடு விடுக்கிறோம்!
இவ்வாறு கோரிக்கை விடுத்தது பொதுபல சேனா அமைப்பு. பலத்த பொலிஸ்
பாதுகாப்புடன் மஹரகமவில் நடைபெற்ற பொதுபல சேனாவின் மாநாட்டில், பத்து
முக்கிய தீர்மானங்களையும் அது நிறைவேற்றியது.
அந்த தீர்மானத்தின் பத்து அம்சங்களும் வருமாறு,
1.இன்று முதல் நாட்டில் பௌத்த, சிங்களத்தை நிலை நிறுத்துவதற்காக சிங்கள பௌத்த மக்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
2.அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையை உடனடியாகக் கலைக்க வேண்டும்.
3.நாட்டில் ஹலால் உணவுகள் தடை செய்யப்பட வேண்டும்.
4.மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து உலமா சபைக்குக் கிடைக்கு நிதி தொடர்பில் அரசு ஆராய வேண்டும்.
5.நாட்டில் சட்டவிரோத பிரசாரங்களை மேற்கொள்பவர்களை மார்ச் 17ஆம் திகதிக்கு முன்னர் இல்லாதொழிக்க வேண்டும்.
6.அடிப்படைவாத குழுக்களின் நடவடிக்கைகள், அவற்றிற்கு நிதி கிடைப்பது தொடர்பில் அரசு ஆராய வேண்டும்.
7.அரச சார்பற்ற நிறுவனங்கள், அதன் நிதி நடவடிக்கைகள் தொடர்பிலும் அரசு
ஆராய்வதோடு, இது தொடர்பில் பொதுக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
8.மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கைப் பெண்களை வீட்டுப் பணிக்கு அனுப்புவதைத் தடை செய்தல்.
9.வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாடு முழுவதும் பௌத்த விகாரைகளையும், பௌத்த மக்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10.பௌத்த சமயத்தைப் பாதுகாப்பதற்காக, புத்தசாசன ஆணைக்குழுவின் அறிக்கையை
நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் கூறியதாவது;
கடந்த வருடம் மே மாதம் 07ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பொதுபல சேனா
அமைப்பு, 10 மாதத்தைப் பூர்த்தி செய்துள்ளது. இந்த அமைப்பை கருவிலே கலைக்க
பல சக்திகள் முயற்சி செய்தன. இவற்றை முறியடித்து நாம் இன்று இந்த மாநாட்டை
நடத்துகிறோம்.
சிங்கள நாட்டிலுள்ள இந்த சிங்கள, பௌத்த மக்களைப் பாதுகாக்க உருவாகியுள்ள
இந்த அமைப்பை இங்குள்ள ஒவ்வொரு பௌத்த, சிங்கள மகனும் பாதுகாக்க முன்வர
வேண்டும்.
பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 12 ஆயிரம் முஸ்லிம்கள்!
நாட்டில் தற்போது பரப்பப்பட்டு வருகின்றது முஸ்லிம் அடிப்படைவாதம். இது
படுபயங்கரமானது. இந்த முஸ்லிம் அடிப்படைவாதத்திலிருந்து இந்த சிங்கள, பௌத்த
நாட்டைக் காக்க பொது பல சேனாவின் 100 இளம் தலைமுறையை உருவாக்கியுள்ளோம்.
அவர்கள் யார் என்பதை இப்போதைக்கு வெளிப்படுத்த மாட்டோம்.
நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாதத்தை நிலைநிறுத்த பாகிஸ்தானில் பயிற்சி
பெற்ற 12 ஆயிரம் முஸ்லிம்கள் இங்குள்ளனர். இவர்களுக்கு மத்திய கிழக்கு
நாடுகளிலிருந்து நிதி கிடைக்கின்றது.
ஹஜ் பெருநாளில் மாடு வெட்டுவதற்கு மட்டும் 30 கோடி ரூபா, சவூதி அரேபியாவிலிருந்து உலமா சபைக்கு கிடைக்கின்றது.
அதுமட்டுமல்லாது, மத்திய கிழக்குக்கு தொழிலுக்குச் செல்லும் சிங்கள,
தமிழ்ப் பெண்களுள் சுமார் 80 ஆயிரம் பேர் முஸ்லிம்களாக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கொழும்பிலுள்ள நிறுவனமொன்றும், சிங்கள, தமிழ் மக்களை, முஸ்லிம் சமயத்திற்கு மாற்றும் நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றது.
ஒவ்வொரு சிங்களவனும் பொலிஸ்காரனாக மாற வேண்டும்!
உலகம் ஏற்றுக்கொண்ட நியதியொன்று உள்ளது. அதாவது, ஒரு நாட்டில்
பெரும்பான்மையாக இருக்கும் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் , அந்த
நாட்டிலுள்ள சிறுபான்மையின மக்கள் செயற்பட வேண்டும்” என்பதே அந்த
நியதியாகும்.
இந்த நியதிக்கமைய அனைவரும் செயற்பட வேண்டும். அதற்காக நாட்டிலுள்ள
சிங்கள மக்கள் அனைவரும் இன்று முதல், உத்தியோகபூர்வமற்ற பொலிஸ்காரர்களாக
மாறவேண்டும். அத்துடன், இந்த பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகளை
நாடுமுழுவதும் எடுத்துச் செல்லவும் அனைவரும் முன்வர வேண்டும்.
நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாதத்தை உருவாக்க செயற்படும்
பிரிவினைவாதமானது ஆயுதத்தை பலத்தைவிட பயங்கரமானது. அதற்காகத்தான் அகில
இலங்கை ஜம்மியத்துல் உலமா, ஹலால் அச்சத்தை மக்களிடையே உருவாக்கியுள்ளது.
நாட்டுக்கு ஹலால் தேவையா? இல்லையா? இதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
இன்று முதல் ஹலால் உணவுகளை நிராகரிப்போம் என நாம் உறுதி பூணுவோம்.
மார்ச் மாதம் 31ஆம் திகதியின் பின்னர் நாட்டில் ஹலால் முற்றாக
இல்லாதொழிக்கப்பட வேண்டும்.
சிங்களவர்களால் உருவாக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ!
சிங்களவர்களால் உருவாக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ அரசு அந்த மக்களைப்
பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இனி பௌத்த
பிக்குகளால் ஹலால் ‘பண’தான் ஓதப்படும்.
ஹலால் மூலம் நாட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலாமா சபையை உடனடியாகக் கலைக்க வேண்டும்.
அவ்வாறில்லையெனில், சிங்களவர்கள் தமது நுகர்வுப் பொருட்களில் தர்ம
சக்கரத்தையும், இந்துக்கள் தமது நுகர்வுப் பொருட்களில் திரிசூலத்தையும்,
கிறிஸ்தவர்கள் தமது நுகர்வுப் பொருட்களில் சிலுவையையும் இலட்சினையாகப்
பொறித்துக்கொள்ள வேண்டும்.
மார்ச் மாதம் 31ஆம் திகதியின் பின்னர் நாட்டில் ஹலால் நடைமுறை
இல்லாதொழிக்கப்படவேண்டும். ஹலால் இல்லாத நாட்டிலே நாம் அனைவரும்
பிறக்கவிருக்கும் புதுவருடத்தை பாற்சோறு உண்டு கொண்டாட வேண்டும்” என்று
குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment