அன்பான பிள்ளைகளே கல்விதான் பெரிய செல்வம்.
அறிவுதான் பெரிய ஆயுதம். நான் தமிழில் சொன்ன இந்த அற்புத வார்த்தைகளை
நீங்கள் மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டாலும் அது தகும். எனவே நீங்கள்
கல்வி கற்க வேண்டும். அதைத்தான் நான் உங்களுக்குத் திரும்பத் திரும்பச்
சொல்லுவேன்.
பயங்கரமான இருள் சூழ்ந்த ஒரு யுகம் இனித் தோன்றப் போவதில்லை என்று உங்களுக்கு நான்
உறுதியளிக்கின்றேன்’ இவ்வாறு இன்று வெள்ளிக்கிழமை மாலை ஏறாவூர் அலிகார்
தேசியக் கல்லூரிக்கு வருகை தந்து அதன் நூற்றாண்டு விழா நிகழ்வுகளில் கலந்து
கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறினார்.
தமிழிலும் சிங்களத்திலுமாக மாணவர்கள்,
ஆசிரியர்கள், பெற்றோர் சமூகத்தலைவர்கள், மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில்
உரையாற்றிய ஜனாதிபதியவர்கள் தொடர்ந்து கூறியதாவது, இன்று அலிகார் தேசியக்
கல்லுயின் நூறு வருடப் பூர்த்தி விழாவில் கலந்து கொண்டு உங்கள் முன்னால்
நின்று பேசுவது எனக்குப் பெரிய சந்தோசத்தைத் தந்திருக்கின்றது. இது நூறு
வயதைக் கடந்த ஒரு பாடசாலை. இந்தப் பாடசாலையில் கற்ற பலர் இந்த நாட்டுக்கு
நன்மை பயக்கின்றவர்களாக மாறியிருக்கின்றார்கள். இந்தக் கல்லூரியின் பழைய
மாணவன் அலிஸாஹிர் மௌலானா அவர்கள் எனது நல்ல நண்பர். அவரது அழைப்பின் பேரில்
இங்கு வந்திருக்கின்றேன்.
அலிகார் என்று கூறும்பொழுது அது ஒரு
பல்கலைக்கழகம். கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்கள் இங்கு வந்த பொழுது
பல்கலைக்கழகம் என்ற பெயரைத்தான் இந்தத் தேசியக் கல்லூரிக்குச்
சூட்டியிருக்கின்றார்கள். அப்பொழுது அவர் கல்வியமைச்சராக இருந்து எமது
நாட்டுக்குச் சேவை புரிந்தார்கள்.
இது 1970 களில் நடந்த வரலாறு. மர்ஹும்
பதியுதீன் மஹ்மூத் அவர்களுடன் நானும் ஒரு சேர 1970 இல் இருந்து 1977 வரைப்
அப்போதைய பாராளுமன்றத்திலே வயது குறைந்த பாராளுமன்ற உறுப்பினராக
இருந்துள்ளேன். மர்ஹும் பதியுதீன் மஹ்மூத் அவர்கள் முஸ்லிம் சமூகத்தின்
கல்வியை மேம்படுத்துவதில் இந்தப் பகுதிக்கு மாத்திரமல்ல முழு நாட்டுக்கும்
சேவையாற்றியிருக்கின்றார்கள் என்பதை நாங்கள் உண்மையாகவும் நேர்மையாகவும்
சொல்லித்தான் ஆக வேண்டும்.
எனவே இங்கு அமர்ந்திருக்கக் கூடிய இளஞ்
சமுதாயத்தனரான பாடசாலை மாணவியர்களாகிய நீங்கள் இந்தக் கல்லூரியையும் கல்வி
வளத்தையும் பாதுகாக்க வேண்டியது உங்களுடைய கடமையாகும். நீங்கள் தான் இந்த
நாட்டிலே ஒற்றுமை சமாதானம் சகவாழ்வு எல்லாவற்றையும் பாதுகாக்க
வேண்டியவர்கள்.
இந்த அலிகார் தேசியக் கல்லூரிக்கு ஒரு
இருள் சூழ்ந்த காலம் இருந்தது. இந்தப் பாடசாலையைத் தொட்டாற்போல ஏறாவூர்
பொலிஸ் நிலையம் இருந்தது. அதனால் அந்தக் காலத்திலே இந்தப் பொலிஸ் நிலையம்
எல்ரீரீஈ இனரால் தாக்கப்பட்டபோது இந்தப்பாடசாலைக்கும் சேதங்கள் ஏற்பட்டதாக
எனக்குச் செய்தி கிடைத்திருந்தது. ஆயினும், அப்படிப்பட்ட அன்று நடந்ததைப்
போன்ற பயங்கரமான இருள் சூழ்ந்த ஒரு யுகம் இனித் தோன்றப் போவதில்லை என்று
நான் உங்களுக்குத் திட்டவட்டமாகக் கூற முடியும்.
எனவே என் அன்பான மாணவ மணிகளே இனிமேல்
நீங்கள் எந்தப் பயமுமில்லாமல் உங்களது கல்வியைத் தொடரமுடியும். அன்பான
பிள்ளைகளே கல்விதான் பெரிய செல்வம். அறிவுதான் பெரிய ஆயுதம். நான் தமிழில்
சொன்ன இந்த அற்புத வார்த்தைகளை நீங்கள் மனப்பாடம் செய்து வைத்துக்
கொண்டாலும் அது தகும். எனவே நீங்கள் கல்வி கற்க வேண்டும். அதைத்தான் நான்
உங்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லுவேன். உங்கள் கல்லூரி மேலும்
மேலும் முன்னேற எனது வாழ்த்துக்கள். அஸ்ஸலாமு அலைக்கும்.’ என்று கூறி
சுருக்கமாகத் தனது பேச்சை முடித்தார் ஜனாதிபதி.
இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண முதலமைச்சர்
நஜீப் அப்துல் மஜீத், உற்பத்தித் திறன் அமைச்சர் பஷீர் சேகுதாவூத்,
பொருளாதாரப் அபிவிருத்திப் பிரதியமைச்சர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினரும் தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்
அமைப்பாளரும் ஏறாவூர் நகர பிதாவுமான அலிஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண
ஆளுநர், கிழக்கு மாகாண அமைச்சர் நஸீர் அஹமட் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து
கொண்டனர்.
from: attankudi info
No comments:
Post a Comment