Monday, February 18

ஆப்கானில் வான் வழித்தாக்குதல்களை நடத்த வெளிநாட்டுப்படைகளுக்கு தடை : ஹமீட் கர்சாய்







ஆப்கானிஸ்தானில் வான்வழித்தாக்குதல்களை நடத்த வெளிநாட்டுப்படையினருக்கு தடை விதித்து கட்டளை பிறப்பிக்கவுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் தெரிவித்துள்ளார். அத்துடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு வான் படையினரின் உதவியை உள்நாட்டுப்படையினர் நாடுவதையும் தடைசெய்யும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்தவாரம் நேட்டோ படையினர் இரவு நேரம் ஆப்கானின் கிழக்குப்பகுதியில் மக்கள் குடியிருப்பு பிரதேசம் ஒன்றின் மீது நடத்திய குண்டு வீச்சு தாக்குதல் காரணமாக 10 சிவிலியன்கள் உயிரிழந்ததை அடுத்தே கர்சாய் மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் கர்சாய் வெளியிட்டுள்ள செய்தியில்
குறித்த தாக்குதல்களை நடத்த ஆப்கான் படைகளே நேட்டோ துருப்புக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக என்னால் அறிய முடிகிறது. அது உண்மையாயின் நாம் வெட்கித்தலை குனிய வேண்டும். எமது சொந்தங்களை கொலை செய்ய நாமே காரனமாகிவிடக்கூடாது.
எமது நாட்டை எம்மால் பாதுகாக்க முடியும். வெளிநாட்டு படைகளிடம் எமது மக்களை பணயம் வைக்கவேண்டியதில்லை என தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஜனாதிபதி கர்சாயின் குறித்த கருத்துக்கள் தொடர்பில் நேட்டோ இதுவரை எவ்விதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. எனினும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ தடை உத்தரவு வெளியானால் நேட்டோ தனது நிலைபாட்டை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment