ரவூப் ஹக்கீமை முந்தினம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சிறிலங்கா படைத்துறை அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இது தொடர்பிலான தனது அதிருப்தியை கடும் சீற்றத்துடன் வெளிப்படுத்தியதாக தெரியவருகின்றது.
அத்துடன், 'சிறிலங்காவின் நீதியமைச்சராகப் பதவி வகித்துக் கொண்டு பொறுப்பற்ற விதத்தில் கருத்துக்கூற வேண்டாம்' என ரவூப் ஹக்கீமை தொலைபேசியில் கோத்தபாய ராஜபக்ச கடிந்து கொண்டார்.
வன்னி மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களை கடந்த ஒருசில தினங்களுக்கு முன் சந்தித்த அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், அசாத் சாலியின் கைது தொடர்பில் சிறிலங்காவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்கு எதிரான நீதியின் ஆட்சி குறித்து சந்தேகம் வெளியிட்டு மிகக் காட்டமான கருத்துகளைக் கூறியிருந்தார்.
இது தொடர்பிலேயே சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்போது அசாத் சாலி சட்டவிதிகளுக்கு அமையவே கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், அவரது கைது முறைப்படியே இடம்பெற்றுள்ளது என்றும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
'நாட்டின் இறைமைக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக அசாத் சாலி பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளார். அதன் அடிப்படையிலேயே நாம் அவரைக் கைது செய்துள்ளோம். அவர் அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட்டதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. தேவையென்றால் பார்வையிடுங்கள்' என்று இந்த தொலைபேசி உரையாடலின் போது ரவூப் ஹக்கீமிடம் கோத்தபாய ராஜபக்ச கூறியதாக அறியமுடிகின்றது.
இந்நிலையில் சிறிலங்கா படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கருத்தை மறுதலித்து அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், எது எவ்வாறு இருப்பினும் அசாத் சாலியின் கைது விடயத்தில் அரசாங்கத்தின் கருத்துடன் உடன்பட முடியாதிருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்
முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், கொழும்பு மாநகர சபையின்
முன்னாள் மேயருமான அசாத் சாலி சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப்
பிரிவினரால் கைது செய்யப்பட்டடை தொடர்பில் கண்டனம் வெளியிட்டுள்ள அனைத்து
எதிர்க்கட்சிகளும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும்
வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment