இனிமேல்
இலங்கையில் இருந்து முஸ்லிம் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்
பொருட்களுக்கு மாத்திரம் ஹாலால் சான்றிதழ் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக
நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.எதிர்வரும் காலங்களில் ஜம்இய்யத்துல் உலமா சபை ஹலால் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை இடை நிறுத்தும் எனவும். இதுவரை ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள பொருட்கள் தொடர்ந்தும் சந்தையில் இருக்கும் எனவும். இலங்கையில் இருந்து முஸ்லிம் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு மாத்திரம் புதிதாக ஹாலால்கள் வழங்கப்படும் எனவும் தெரியவருகின்றது.
அத்துடன் இதற்கு பின்னர் ஹலால் சான்றிதழ் விநியோகிக்கப்படவேண்டிய தேவை ஏற்பட்டால் எவ்விதமான கட்டணங்களும் அறவிடாமல் விநியோகிப்பதற்கும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்திட்டத்தின் படி ஹலால் சான்றிதழ் மூலம் இலங்கைக்கு கிடைக்கபெறும் அன்னியச் செலாவணியில் எவ்வித வீழ்ச்சியும் ஏற்படாது எனவும். இலங்கையில் ஹலால் தடை செய்துவிட்டோம் என்ற நற்பெயரை அரசு தக்கவைத்துகொள்ளும் எனவும் மேலும் தெரியவந்துள்ளது.
மதத்தலைவர்கள், இலங்கை வர்த்தக சபை பிரதிநிதிகள், முஸ்லிம் வியாபாரிகள் மற்றும் ஜம்இய்யத்துல் உலமா முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ அவர்களுடன் நடாத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னரே இவ்வாறான தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹலால் சான்றிதழுடன் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் தொடர்பில் பொதுபலசேன அமைப்பினர் கடந்த காலங்களில் எதிர்ப்புக்களை தெரிவித்ததையடுத்து ஏற்பட்ட ஒரு பதற்றமான சூழ்நிலையிலேயே இந்த கூட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment