Friday, June 7

புதிய தேர்தல் முறையில் தெரிவாகும் வட்டார உறுப்பினருக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும்; அமைச்சர் அதாவுல்லா!


Atha-6-6 (4)
-ஜே.எம். வஸீர்-
நாட்டைகட்டியெழுப்ப வேண்டுமானால் கிராமங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும். அந்த அமானிதம் உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் மற்றும் அங்கத்தினர்கள், ஊழியர்களினது கையிலேதான் உள்ளது என உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் எ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.
நாட்டில் காணப்படும் 140 உள்ளுராட்சி சபைகளுக்காக திண்மக்கழிவு முகாமைத்துவத்தினை சீராக மேற்கொள்ள உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் 200 மில்லியன் ரூபா செலவில் அப்பணிக்கு தேவையான டிரெக்டர் மற்றும் ரெய்லர்,கழிவகற்றும் இயந்திரம் என்பனவற்றைபகிர்ந்தளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போதே அமைச்சர் அதாவுல்லா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டு வாகனங்களைக் கையளித்தார். இதில் 140 உள்ளுராட்சி சபைகளின் தலைவர்களும்,அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா மேலும் கூறியதாவது;
“நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் முதலில் கிராமங்களை கட்டி எழுப்ப வேண்டும். இதுதான் நமது ஜனாதிபதி அவர்களின் கோட்பாடாகும். கிராமத்தை கட்டியெழுப்புவதாயின் உள்ளுராட்சி சபைகளின் கைகளில்தான் அந்தப் பொறுப்பு உள்ளது.
உள்ளுராட்சி சபைகளின் தலைவராகிய நீங்கள் என்றும் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். மக்களுக்காய் அவர்களுக்குத் தேவையான சேவைகளை செய்ய வேண்டும்.
கட்டிடங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், வாகன வசதிகள் சம்பந்தமாக அரசாங்கம் என்ற வகையில் எமது ஜனாதிபதி அவர்களும் உள்ளுராட்சித் துறைக்குப் பொறுப்பானஅமைச்சர் என்ற வகையில் நானும் அதற்காய் அர்ப்பணிப்புடன் உழைத்துக் கொண்டிருக்கின்றோம்.
நாட்டில் பின்தங்கிய உள்ளுராட்சி சபைகளையும் ஏனைய உள்ளுராட்சி சபைகளையும் இனங்கண்டு பலசலுகைகளை உங்களுக்காய் செய்து கொண்டிருக்கும் போது எமக்காய் செய்யும் உபகாரம் மக்களுக்கு சிறந்த சேவையாற்ற வேண்டும். அதனைத்தான் எமது ஜனாதிபதி அவர்களும் நானும் எதிர்பார்க்கின்றோம்.
நாட்டை முன்னேற்றுவதானால் கிராமங்கள் முன்னேற வேண்டும். அந்த அமானிதம் உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் மற்றும் அங்கத்தினர்கள் ஊழியர்களினது கையிலேதான் உள்ளது.
அந்தக் கோட்பாட்டிற்கமைய கிராமத்தைக் கட்டியெழுப்ப முன்வருமாறு இன்றைய தினம் அழைக்கின்றேன். அதன் மூலம் நமது ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆசியாவின் ஆச்சர்யமிக்க இலங்கையைகட்டியெழுப்ப முடியும் என எதிர்பார்க்கின்றேன்.
மேலும் இன்று விருப்புவாக்குகளை நாம் இல்லாதொழித்திருக்கின்றோம். வட்டாரத் தேர்தல் முறைமைக்கான எல்லை நிர்ணய விடயங்களும் இறுதிக் கட்டத்தை வந்தடைந்திருக்கின்றது.
இனிமேல் நாட்டில் உள்ளுராட்சி சபைகளின் தேர்தல் நடைபெறுமாயின் அது வட்டார முறைமையில் தான் நடைபெறும். அதன்போது கிராமத்திற்கான உறுதியான தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினருக்கு நிறைய அதிகாரங்கள் வழங்கப்படும். அதனால் மக்களுக்கு சிறந்த சேவையாற்றவும் முடியும்.
இன்னும் நாட்டில் காணப்படும் பல உள்ளுராட்சிசபைகளின் தலைவர்கள் வாகனங்களின்றி சிரமப்படுகின்றனர். அவைகளை ஜனாதிபதி அவர்களினதும்,எனது கவனத்திற்கும் கொண்டு வந்திருக்கின்றனர்.
தேவையான வாகனங்களைப் பெற்றுக் கொடுக்க நான் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுடன் கலந்தாலோசித்துள்ளதுடன் அதற்குத் தேவையான ஏற்பாடுகளை எனது அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.
எனவே வாகனமின்றி சிரமப்படும் உள்ளுராட்சி சபைகளுக்கு மிக விரைவில் தீர்வு எட்டப்படும்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் இன்திக பண்டாரநாயக்க, அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க, அமைச்சின் உயர் அதிகாரிகள், உள்ளுராட்சி ஆணையாளர்கள், உள்ளுராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.
Atha-6-6 (5)Atha-6-6 (1)Atha-6-6 (2)Atha-6-6 (3)

No comments:

Post a Comment